மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயதுடைய மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய சம்பவம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
இது பற்றி தெரியவருவதாவது,
18 வயதுடைய மாணவி ஒருவர் நிறைமாத கர்ப்பிணி என்பதை மறைத்து வயிற்று வலி என தெரிவித்து சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் மட்டு. போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியர் சரியான முறையில் சோதனையிடாத நிலையில் மாணவிக்கு ஊசி மூலமாக வயிற்று வலிக்கான வலிநிவாரண மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அதிகாலை 5 மணியளில் மாணவி மலசல கூடத்திற்கு சென்று குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசியுள்ளார்.
குழந்தை யன்னலில் கீழ் உள்ள பிளேற்றில் வீழ்ந்து அழுகுரல் கேட்டதையடுத்து தாதியர்கள் அங்கு சென்று நிலையில் மாணவி குழந்தையை பெற்றுள்ளார் என அவர்களுக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து, குழந்தை மீட்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன், தாய்க்கும் சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த குழந்தையும் தாயும் பாதுகாப்பாக உள்ளதாக மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாறஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.