அரசியல்உள்நாடு

ரணில் மக்களுக்காகவே தீர்மானங்களை எடுக்கின்றார் – தலதா அத்துகோரள

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைவு குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்றவர்களின் நிலைப்பாடுகளுக்கமையவே இறுதி தீர்மானத்தை எட்ட முடியும்.

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் அதனை நாட்டுக்கு வெளிப்படுத்துவோம் என ஐ.தே.க. பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

கண்டியில் ஞாயிற்றுக்கிழமை (09) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் தரப்பினரின் நிலைப்பாட்டுக்கமையவே அவற்றின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும். அந்த வகையில் தற்போதும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவை தோல்வியடைந்தால் அது குறித்து நிச்சயம் நாட்டுக்கு வெளிப்படுத்துவோம். எவ்வாறிருப்பினும் இன்னும் இறுதி கட்டத்தை நாம் எட்டவில்லை.

இவ்வாரமும் இருதரப்புக்களுக்குமிடையில் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணக்கப்பாடு எட்டப்பட்டால் முன்னோக்கிச் செல்வோம்.

அவ்வாறில்லை என்றால் மாற்று தீர்மானமொன்றை எடுப்போம். எவ்வாறிருப்பினும் ஐக்கிய தேசிய கட்சியால் தனித்து எந்தவொரு தீர்மானத்துக்கும் வர முடியாது. உள்ளுராட்சிமன்றத் தேர்தல் என்பது மக்களுக்கான தேர்தலாகும்.

எனவே அந்த மக்களுக்காக சிந்தித்து சிறந்த தீர்மானங்களை எடுக்க வேண்டிய பொறுப்பு கட்சி தலைவர்களுக்குரியது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களுக்காகவே சிந்தித்து தீர்மானங்களை எடுக்கின்றார்.

அதே போன்று ஏனைய தலைவர்களும் செயற்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

மே 9 கலவரத்தில் அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அவ்வாறு சொத்து சேதத்தை ஏற்படுத்தியவர்களிடமே அதற்கான இழப்பீட்டையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதால் பாராளுமன்றத்தை சுற்றி வளைக்கத் திட்டமிட்டவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும்.

நாட்டில் தற்போதுள்ள பிரதான பிரச்சினைகளை மறைப்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறான விடயங்களை நோக்கி மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறது. உண்மையில் இவை அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற விடயங்கள் ஆகும் என்றார்.

-எம்.மனோசித்ரா

Related posts

ராணியின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் : உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைத்துள்ளது

உயர்தர பரீட்சை பெறுபேற்றுக்கான சான்றிதழ்கள் இன்று முதல்