மஹிந்த ராஜபக்க்ஷ ஆட்சியில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீது குற்றப்பிரேரணை கொண்டுவந்திருக்கக் கூடாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் அரசாங்கத்துக்கு எதிராக ஷிராணி பண்டாரநாயக்க எடுத்த சில சட்ட முடிவுகளைத் தொடர்ந்து அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், ஜனவரி 2013 இல் அவர் தலைமை நீதிபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இருப்பினும், ஊடகங்களுக்கு இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ, அந்த நேரத்தில் அத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்கக் கூடாது என்று கூறினார்.
தற்போதைய அரசாங்கம் நாம் செய்த தவறுகளை மீண்டும் செய்யக் கூடாது. அவர்கள் அதை மீண்டும் செய்தால், அது சரியல்ல. இதுபோன்ற முடிவுகளுக்கான விலையை எங்கள் கட்சி இன்னும் செலுத்தி வருகிறது.” என்று அவர் கூறினார்.
அரசியல் முடிவுகளை எடுப்பதற்காக ஒரு தனிநபரை குறிவைத்து பாராளுமன்றம் பயன்படுத்தப்பட்டால், தனது கட்சி அதை ஆதரிக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ மேலும் தெரிவித்தார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்குவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.