சுமார் 120 கி.கி. ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை கடத்தலில் ஈடுபட்ட 6 சந்தேகநபர்கள் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் ஆழ்கடலில் வைத்து கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் (11) இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து, குறித்த பல நாள் மீன்பிடி படகு திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனையின் போது மிக சூட்சுமமாக மறைத்து இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த சுமார் 77 கிலோ 484 கிராம் ஹெரோயின் மற்றும் சுமார் 42 கிலோ 334 கிராம் ஐஸ் போதைப்பொருளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சந்தேகநபர்கள் போதைப்பொருள், மற்றும் நெடுநாள் மீன்பிடி படகு ஆகியவற்றுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 19 – 50 வயதுடைய தெவிநுவர, வலஸ்கல பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
நேற்றையதினம் (12) கடற்படைத் தளபதியினால் திக்கோவிட்ட துறைமுகத்தில் குறித்த போதைப்பொருட்கள் அவதானிக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முடிப்பதற்கு பங்களித்த அனைத்து கடற்படை வீரர்கள் மற்றும் நடவடிக்கைக்கு பங்களித்த ஏனைய தரப்பினரையும் கடற்படைத் தளபதி பாராட்டினார்.
இந்நிகழ்வில் பேசிய கடற்படைத் தளபதி, சர்வதேச மற்றும் உள்ளூர் தொடர்புகள் மூலம் பெறப்பட்ட நம்பகமான தகவல்களின் அடிப்படையில், பிற தரப்பினரின் பங்களிப்புடன் ஆழ்கடலில் வெற்றிகரமான போதைப்பொருள் சோதனை நடவடிக்கையை கடற்படையால் மேற்கொள்ள முடிந்தது என்று கூறினார்.
அங்கு, மேலும் கருத்துக்களைத் தெரிவித்த கடற்படைத் தளபதி,
தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் மக்களின் போசணைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காகவும் தேவையான ஆதரவையும் நிவாரணத்தையும் வழங்க இலங்கை கடற்படையினர் தொடர்ந்து பணியாற்றி வருவதுடன், மீனவ சமூகத்திற்குள் ஒரு சிறிய குழுவினரால் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் தொடர்பாக கடற்படை விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்பட்டது.
கௌரவமான வாழ்கை – பாதுகாப்பான நாடு என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்தும் அந்த சமூகப் பேரழிவிலிருந்தும் நாட்டின் குழந்தைகளை விடுவிக்க மற்றும், நோயற்ற நாடு மற்றும் ஆரோக்கியமான குடிமக்கள் என்ற கருத்தை நனவாக்கும் பொருட்டு, இலங்கை கடற்படை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலனாய்வு சேவைகள் மற்றும் கடல்சார் பங்குதாரர்கள் மற்றும் நாட்டின் சட்ட அமுலாக்க முகவர்களால், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை நீதியின் முன் நிறுத்த கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், நாட்டின் எதிர்கால குழந்தைகளை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்ற குடிமக்களாக, சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்று கடற்படைத் தளபதி மீனவ சமூகத்தினரிடம் வலியுறுத்தினார்.
மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொடர்புகளைப் பயன்படுத்தி, கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், மீன்பிடி நடவடிக்கைகள் என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதற்கும், அத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் வெற்றிபெற அனுமதிக்கப்படாது என்றும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இதுபோன்ற கடத்தலில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து கைது செய்ய எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் வலியுறுத்தப்பட்டது.