உள்நாடுபிராந்தியம்

மன்னார் வங்காலையில் மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழுவை திருப்பி அனுப்பிய மக்கள்

மன்னார் வங்காலை கிராமத்தில் கடற்கரை பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (04) மாலை கணிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழு ஒன்றை அக்கிராம மக்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றி உள்ளனர்.

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (04) மாலை 2.30 மணியளவில் கணிய மணல் ஆராய்ச்சிக்காக குழு ஒன்று நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கிராமத்தில் கடற்கரை பகுதியில் கணிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்துள்ளனர்.

கிராமத்தில் உள்ள எந்த தரப்பிடமும் எவ்வித அனுமதியும் பெற்றுக்கொள்ளாமல் சுமார் 20 பேர் அடங்கிய குழுவினர் அவ்விடத்திற்கு வருகை தந்து கணிய மண் ஆராய்ச்சியை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் சந்தேகம் கொண்ட கிராம மக்கள் அவ்விடத்திற்கு சென்று அவர்களுடன் விசாரணைகளை முன்னெடுத்த போது, இதாம் பல்கலைக்கழகத்தில் இருந்து வருகை தந்துள்ளதாகவும், கணிய மண் ஆராய்ச்சியை மேற்கொண்டு ஆராய்ச்சி வெற்றி பெற்றால் கணிய மணல் அகழ்வு முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அக்கிராம மக்கள் உடனடியாக வங்காலை பங்குத்தந்தை அருட்தந்தை லக்கோன்ஸ் அடிகளாரின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் அருட்தந்தை சம்பவ இடத்திற்கு வருகை தந்தார்.

ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழுவுடன் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ஒருவரும் வருகை தந்திருந்தார்.

தாங்கள் உரிய அனுமதியை பெற்று கொண்டு வருகை தந்ததாக குறித்த குழுவினர் தெரிவித்த போதும் எவ்வித அனுமதியும் பெற்றுக் கொள்ளாத நிலையில் அவர்கள் வருகை தந்தமை தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கணிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குறித்த குழுவினர் அங்கிருந்து சென்றனர்.

மன்னார் தீவு பகுதியில் முன் னெடுக்கப்பட்டு வருகின்ற கணிய மணல் அகழ்வுக்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை முன்னெடுத்து வரும் நிலையில் மன்னார் தீவுக்கு வெளியில் பெருநிலப்பரப்பில் குறித்த ஆராய்ச்சி நடவடிக்கை முன்னெடுக்க இருந்தரமை அக்கிராம மக்கள் மத்தியில் பாரிய விசனத்தை ஏற்படுத்தி யுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்

Related posts

‘பொடி லெசி’ விளக்கமறியலில்

ரயில் சேவை ஸ்தம்பிக்கும் நிலை

கொழும்பில் 12 மணிநேர நீர் வெட்டு