அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் மீது மக்கள் கோபம் – மேயர் வேட்பாளரை விரைவில் அறிவிப்போம் – சாகர காரியவசம்

பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் யார் என்பதை ஓரிரு நாட்களில் அறிவிப்போம். வர்த்தக நகர் கொழும்பிற்கான மேயர் வேட்பாளர் என்பவர் சாதாரணமானவராக இருக்க முடியாது.

அதற்கமைய மிகப் பொருத்தமான ஒருவரை நாம் களமிறக்குவோம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

திங்கட்க்கிழமை (10) கொழும்பு மாவட்ட செயலகத்தில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம்.

இலங்கையின் தலைநகரான வர்த்தக நகர் கொழும்பிற்கான மேயர் வேட்பாளர் என்பவர் சாதாரணமானவராக இருக்க முடியாது.

எனவே முகாமைவத்துவம், வர்த்தகம் என சகல துறைகளிலும் தேர்ச்சி பெற்ற சிரேஷ்ட பிரஜையொருவரையே நாம் மேயர் வேட்பாளராகக் களமிறக்குவோம்.

சமல் ராஜபக்ஷ தேர்தலில் களமிறங்குவதற்கு முன்வந்தால் அவரது கோரிக்கையை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வோம்.

எவ்வாறிருப்பினும் அவர் இது தொடர்பில் கட்சிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

வர்த்தக நகரான கொழும்பை மையமாகக் கொண்டே முழு நாடும் இயங்குகிறது. அவ்வாறிருக்கையில் அதனை நிர்வாகம் செய்யக் கூடிய மேயர் அந்தளவு பலம் பொருந்தியவராக இருக்க வேண்டும்.

ஓரிரு நாட்களில் அது தொடர்பில் அறிவிப்போம். இவ்விடயத்தில் கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை.

கடந்த தேர்தல்களில் மக்கள் பாரிய நம்பிக்கையுடன் இந்த அரசாங்கத்திடம் ஆட்சியைக் கையளித்தனர்.

ஆனால் அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றவில்லை. இதனால் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் மீது கோபம் கொண்டுள்ளனர்.

அதற்கு உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் மூலம் பதிலளிக்கவும் மக்கள் தயாராகிவிட்டனர். உகண்டாவிலிருந்து டொலர்களை மீட்பதாகக் கூறினர்.

ஆனால் நாட்டிலிருந்து சட்ட விரோதமாக ஒரு டொலர் கூட வெளியாகியதற்கான ஆதரத்தைக் கூட இவர்களால் திரட்ட முடியவில்லை. எனவே தேசிய மக்கள் சக்தி கூறிய அனைத்தும் பொய் என்பது தெரியவந்துள்ளது என்றார்.

-எம்.மனோசித்ரா

Related posts

ரிஷாட் பதியுதீனுடன் இணைந்த மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி முஸ்தபா!

பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு பால்மா நிறுவனங்கள் கோரிக்கை

மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது உயிரிழந்த தாயும், சேயும்

editor