உள்நாடு

கேகாலை உப பொலிஸ் பரிசோதகர் கைது – காரணம் வெளியானது

பொலிஸ் கெப் வண்டியை முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற குற்றத்திற்காக உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் நேற்று (27) வரகாபொல, தொலங்கமுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டபோது சந்தேகநபர் குடிபோதையில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் கேகாலை மொலகொட பகுதியைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஆவார், இவர் கேகாலை பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றி வருகிறார்.

சந்தேக நபர் கேகாலை பொலிஸ் நிலையத்திலிருந்து அம்பேபுஸ்ஸவுக்கு அலுவலக வேலைக்காக கேகாலை பொலிஸுக்கு சொந்தமான கெப் வண்டியில் பயணம் செய்திருந்தார்.

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கலிகமுவ, கொப்பேவல பகுதியில் இவ்வாறு பயணித்த பொலிஸ் பரிசோதகர் எதிர் திசையில் இருந்து வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குப் பிறகு, உப பொலிஸ் பரிசோதகர் வரகாபொல நோக்கி வண்டியை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளார்.

விபத்தில் சிக்கிய நபரும் சம்பவ இடத்தில் இருந்த சிலரும் வரகாபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொலங்கமுவ பகுதி வரை கெப் வண்டியை வண்டியைத் துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.

பின்னர், வரகாபொல பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வரகாபொல பொலிஸ் அதிகாரிகள், சம்பவத்துடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகரை கெப் வண்டியுடன் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோகதர் பின்னர் வரகாபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC)யின் அறிவுறுத்தலின் பேரில் வரகாபொல ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரிடம் முற்படுத்தப்பட்ட போது அவர் குடிபோதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் வரகாபொல பொலிஸாரால் கேகாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related posts

சமூகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது

குருந்தூர் மலை: குவிக்கப்படும் பாதுகாப்பு படை- நடக்கப்போவது என்ன?

மீள ஆரம்பிக்கப்படும் களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை!