நாட்டின் பல பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட டோக் குரங்குகளுக்கான கருத்தடை திட்டம் தோல்வியடைந்துள்ளது.
குரங்குகளால் ஏற்படும் அச்சுறுத்தலுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மாத்தளை மாவட்டத்தின் ஹரஸ்கமவில் முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் பல சவால்கள் காரணமாக தற்போது முடங்கியுள்ளதாக மாவட்ட விவசாயப் பணிப்பாளர் அஜித மணிக்கும தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இதனை தெரிவித்துள்ளார்.
கருத்தடை செய்வதற்கு கால்நடை மருத்துவர்களின் பற்றாக்குறையும், கிரித்தலை கால்நடை மருத்துவப் பிரிவுக்கு குரங்குகளை ஏற்றிச் செல்வதற்கு அதிக செலவினங்கள் ஏற்படுவதும் முதன்மையான தடையாக இருப்பதாக விவசாயப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கமகெதர திஸாநாயக்க மற்றும் விவசாய அபிவிருத்தி பிரதியமைச்சர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திட்டத்திற்கு தேவையான உபகரணங்களுக்கு 12 மில்லியன் ரூபா செலவாகும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.