இஸ்ரேலிய இராணுவத்திற்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் செயற்கை தொழில்நுட்பத்தினை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தமைக்காக இரண்டு பணியாளர்களை அந்த நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியுள்ளதாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் 50 வது வருடகொண்டாட்டத்தின் போது அந்த நிறுவனம் இஸ்ரேலிய இராணுவத்திற்கு செயற்கை தொழில்நுட்பத்தினை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண் ஊழியர்களையே அந்த நிறுவனம் வேலை நீக்கம் செய்துள்ளது.
ஒருவர்,புகழ்பெறுவதற்காகவும், இந்த பெரும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வை அதிகபட்சமாக சீர்குலைப்பதற்காகவும் தவறான நடத்தையில் ஈடுபட்டனர் என மைக்ரோசொவ்ட் தனது பணிநீக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
மற்றைய பணியாளர் ஏற்கனவே தனது இராஜினாமாவை அறிவித்துவிட்டார் என தெரிவித்துள்ள அந்த நிறுவனம்,எனினும் ஐந்து நாட்களிற்கு முன்னதாகவே அவரை வேலையிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மைக்ரோசொப்டின் நிறுவனத்தின் நிறைவேற்றதிகாரி ஒருவர் புதிய தயாரிப்பு அம்சங்கள் மற்றும் மைக்ரோசொப்டின் செயற்கை நுண்ணறிவு குறித்த நீண்டகால தொலைநோக்கு குறித்து உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில் அந்த நிறுவனத்தின் பொறியியலாளர் இப்திஹல் அபொசாட் மேடைக்கு சென்று நீங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சமூகத்தின் நன்மைக்காக பயன்படுத்தப்படவேண்டும் என நீங்கள் தெரிவிக்கின்றீர்கள் ஆனால், மைக்ரோசொவ்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு ஆயுதத்தை இஸ்ரேலிய இராணுவத்திற்கு விற்பனை செய்கின்றது என தெரிவித்தார்.
ஐம்பதினாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர், மைக்ரோசொப்ட் இந்த இனப்படுகொலையை எங்கள் பிராந்தியத்தில் முன்னெடுக்கின்றது என அவர் நிறைவேற்றதிகாரியை நோக்கி சீற்றத்துடன் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக மைக்ரோசொப்ட் அதிகாரி தனது உரையை இடைநிறுத்தவேண்டிய நிலையேற்பட்டது.
அபுசாத் தொடர்ந்தும் சீற்றத்துடன் மைக்ரோசொப்டின் அதிகாரியை நோக்கி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன் அந்த அதிகாரி உட்பட மைக்ரோசொப்டில் பணிபுரியும் அனைவரினது கரங்களிலும்இரத்தக்கறை படிந்துள்ளது என தெரிவித்தார்.
பாலஸ்தீன மக்களிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் அவர் தனது கெபியே ஸ்கார்வை மேடையில் வீசினார்.
அதன் பின்னர் அவர் அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டார்.
இதன் பின்னர் வானியா அகர்வால் என்ற ஊழியரும் மைக்ரோசொப்டின் நடவடிக்கைகளிற்கு தனது எதிர்ப்பை வெளியிட்டு நிகழ்வை குழப்பினார்.