அரசியல்உள்நாடு

அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் சக்தியாக மீண்டும் எழுச்சி பெறுவோம் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் சக்தியாக மீண்டும் எழுச்சிப் பெறுவோம்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மீண்டும் எமது பலத்தை உறுதிப்படுத்துவோம்.

எமது வீடுகளுக்கு தீ வைத்தவர்களின் விபரத்தை பகிரங்கப்படுத்துமாறு அரசாங்கத்திடம் மீண்டும் சவால்விடுக்கிறேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற தொகுதி மற்றும் ஆசன அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேசிய மக்கள் சக்தி தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட பொய் இன்று அரசாங்கத்துக்கு எதிராகவே திரும்பியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

தேர்தல் பிரச்சார மேடைகளில் குறிப்பிடும் அனைத்தையும் நடைமுறையில் செயற்படுத்த முடியாது என்பதை ஜனாதிபதியும், ஆளும் தரப்பினரும் தற்போது நன்கு விளங்கிக் கொண்டுள்ளார்கள். எதிர்வரும் காலங்களில் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பொய்யுரைக்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான சகல பணிகளையும் முன்னெடுத்துள்ளோம். நாடளாவிய ரீதியில் போட்டியிடுவோம்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு சவால்விடுக்கும் பிரதான சக்தியாக மீண்டும் எழுச்சிப் பெறுவோம்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அமோக வெற்றிப்பெறுவோம். கடந்த காலங்களில் எம்மை விட்டுச் சென்றவர்கள் பலர் மீண்டும் எம்முடன் ஒன்றிணைவார்கள்.

2022 மே 09 ஆம் திகதியன்று மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவுடன் தான் எமது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. எமது பாரிய இழப்பு ஏற்பட்டது.அதற்குரிய நிவாரணத்தை சட்டத்தின் பிரகாரம் பெற்றுக் கொண்டோம்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட இழப்பீட்டுத் தொகையை குறிப்பிட்டுக் கொண்டு மக்கள் மத்தியில் மீண்டும் அரசியல்வாதிகள் மீது வெறுப்பை தோற்றுவிக்க தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் முயற்சிக்கிறது.

தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளுக்காக பெற்றுக்கொண்ட இழப்பீட்டுத்தொகையை பகிரங்கமாக குறிப்பிடும் அரசாங்கம் வீடுகளுக்கு தீ வைத்தவர்களின் பெயர் விபரங்களையும் வெளியிட வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு அறிவுறுத்தியிருந்தேன்.

ஆனால் இதுவரையில் அரசாங்கம் அதற்கு பதிலளிக்கவில்லை. தற்றுணிவு என்பதொன்று இருந்தால் வீடுகளுக்கு தீவைத்தவர்களின் விபரங்களை வெளியிடுமாறு மீண்டும் சவால்விடுக்கிறேன் என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி எடுத்துச் செல்லப்படும் பவதாரணியின் உடல் !

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

ஜனவரி 60 முதல் ஓய்வூதியம் பெறும் சட்டம் அமுலுக்கு