வகைப்படுத்தப்படாத

தமிழகத்தின் அடுத்த முதல்வராகிறார் எடப்பாடி பழனிச்சாமி

(UDHAYAM, CHENNAI) – தமிழகத்தில் ஆட்சி அமைக்க அதிமுக சட்டசபை குழுத் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அதிகாரப்பூரமாக அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்கிறார். மேலும் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் வித்யாசாகர் உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வான எடப்பாடி பழனிச்சாமி தமக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தி வந்தார்.

இடைக்கால முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் தமக்கு பெரும்பான்மை இருக்கிறது, சட்டசபையில் நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என ஆளுநரிடம் தொடர்ந்து வலியுறுத்தினார்.

இந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைத்திருந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இச்சந்திப்பின் முடிவில் தமிழகத்தில் ஆட்சி அமைக்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார்.

இன்று மாலை 5 மணிக்கு தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க உள்ளார். அத்துடன் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தமிழகத்தில் 2 வாரங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

Related posts

இத்தாலியில் அவசரநிலை பிரகடனம்…

பிணைமுறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான விவாதம் பிற்போடப்பட்டது

கீதாவின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய அதிரடி உத்தரவு!