அரச கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய பழக்கடை உரிமையாளரை சரீரப் பிணையில் செல்ல கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பழக்கடைகளின் நிலைமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் செவ்வாய்க்கிழமை (15) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழு பிரதான வீதியில் உள்ள பழக்கடை ஒன்றை திடீர் பரிசோதனை மேற்கொள்வதற்காக சென்றது.
இதன்போது குறித்த பழக் கடையின் உரிமையாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் தனது கடையைச் சோதனை செய்ய வேண்டாம் என தடுத்ததுடன் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் கடமையை செய்ய விடாது இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டடு பொலிஸாரின் உதவியுடன் கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு பின்னர் குறித்த பழக்கடை உரிமையாளருக்கு எதிராக அன்யை தினம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதன் போது குறித்த பழக்கடை உரிமையாளரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் கல்முனை நீதிவான் நீதிமன்று விடுவித்துள்ளதுடன் எதிர்வரும் மே 19 ஆம் திகதிக்கு வழக்கு மறுதவணை இடப்பட்டது.
மேலும் குறித்த பழக்கடையை மீள்சோதனை செய்து ஏதேனும் குறைபாடுகள் மற்றும் சுகாதார சீர்கேடுகள் காணப்படும் பட்சத்தில் கல்முனை நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
-பாறுக் ஷிஹான்