கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை தொடர்பாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றப்பிரிவினால் குறித்த கைது மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த 19 ஆம் திகதி, கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை இலக்கம் 05 நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதன்படி, கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (24) கைது செய்யப்பட்டனர்.
நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த பிங்புர தேவகே சமிது திவங்க வீரசிங்க என்ற 23 வயது இளைஞனும், அதே முகவரியைச் சேர்ந்த சேசத்புர தேவகே சமந்தி என்ற 48 வயது பெண்ணும் கொலை தொடர்பான தகவல்களை மறைத்து, குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் கொலையின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் தம்பி என்பது தெரியவந்துள்ளது.
அதன்படி, இந்தக் குற்றச் செயல் தொடர்பாக இதுவரை 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.