கடந்த அரசாங்கங்கள் மலையக வீதிகளை அபிவிருத்தி செய்ய 100 மில்லியன் ரூபாய்களை மாத்திரமே ஒதுக்கீடு செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் பாராளுமன்றில் இன்று (07) முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“இலங்கையில் நிறைய பாதைகள் இருக்கின்றன. இந்த பாதைகள் யாருக்கு சொந்தம் என்று இன்னும் யாருக்கும் தெரியாது.
இது UC-க்கு சொந்தம், பிரதேச சபைக்கு சொந்தம் என்று தட்டிக் கழித்து விடுகிறார்கள்.
ஆகவே தோட்ட பாதைகளை புனரமைப்பதற்காக கடந்த கால அரசாங்கங்கள் எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிதியைதான் கொடுத்திருந்தன. அது கௌரவ தொண்டமானாக இருக்கலாம், கௌரவ திகாம்பரமாக இருக்கலாம்.
100 மில்லியன் ரூபாய்களை கொடுத்து இலங்கையில் உள்ள தோட்ட பகுதிகளுக்கு எல்லாம் பாதைகளை எல்லாம் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றால், எங்கிருந்து அபிவிருத்தி செய்ய முடியும். ஆகவே, அதற்காக நாங்கள் இன்று உங்களை குற்றம் சொல்லவில்லை.
என்.பி.பியை நாங்கள் குற்றம் சொல்லவில்லை. இப்பொழுதுதான் முதன்முறையாக நீங்கள் வந்து இருக்கிறீர்கள். உங்கள் தலைமையிலாவது இதற்கு நல்லதை செய்ய ஏற்பாடு செய்யுமாறு நாங்கள் அன்பாக கேட்டுக் கொள்கிறோம்.” என்றார்.