கற்பிட்டி கண்டக்குளி பிரதேசத்தில் காற்றாலை மின் உற்பத்தி செய்யும் கோபுரத்தின் ஒரு பகுதி (சிறகு) உடைந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்த விபத்து நேற்று (02) பிற்பகல் இடம்பெற்றதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தனியார் மின்சார உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலை கோபுரத்தின் ஒரு பகுதி திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உடைந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவ்விடத்தில் குறித்த நிறுவனத்திற்கு சொந்தமான ஐந்து காற்றாலை கோபுரங்கள் இருப்பதாகவும், அவற்றில் ஒன்றின் ஒரு பகுதி இவ்வாறு உடைந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் காற்றாலை விசையாழிகளில் ஒன்று 270 அடிக்கு மேல் உயரமும், அங்கு நிறுவப்பட்ட தளம் சுமார் 129 அடி நீளம் கொண்டது.
காற்றாலை கோபுரம் உடைந்து விழுந்ததில் ஒரு வீடு முற்றிலுமாக சேதமடைந்ததோடு, அருகில் அமைந்துள்ள இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இருப்பினும், கோபுரம் உடைந்து விழுந்த நேரத்தில் வீடுகளில் யாரும் இல்லை என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
-ஊடகவியலாளர் சப்ராஸ்