உள்நாடு

மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கி விபத்து – பெண் பலியான சோகம்

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற மூன்று வீதி விபத்துகளில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

பொல்பிதிகம, பத்தேகம மற்றும் பேலியகொட பொலிஸ் பிரிவுகளில் நேற்று (27) இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்டெங்வெவ – ஹிரிபிட்டிய வீதியில் உள்ள தங்கொல்லாகம பகுதியில் பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் அணிந்திருந்த சேலையின் ஒரு பகுதி பின்புற சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்ததில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஹிரிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் நிகதலுபொத்த பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஆவார்.

இதேவேளை, பத்தேகம – வந்துரப வீதியில் சுதுவெலிபத பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சுதுவெலிபொத்த பகுதியில் வசிக்கும் 50 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, கொழும்பு – கண்டி பிரதான வீதியில் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே நினைவு மேம்பாலம் அருகே, கொழும்பில் இருந்து கண்டி நோக்கிய வீதியில் இருந்து பாதசாரிகள் கடக்க முடியாத இடத்தில், அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வீதியை கடக்கும் நபர் மீது மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பேலியகொட பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

Related posts

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்

ஒரு லீட்டர் டீசல் விலை ரூ.10 இனால் குறைக்கப்படும்

பாடசாலை மாணவர்களுக்கு ELM முறை