அரசியல்உள்நாடு

நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும் – சஜித்

தலைமைத்துவம் வகிக்கும் போது அந்தத் தலைமையின் கீழ் வெற்றி சாதனைகளை ஏற்றுக் கொள்வது போல், தோல்விகள், பின்னடைவுகளை சந்தித்தாலும் அதற்கான பொறுப்பையும் ஏற்க தயங்கக்கூடாது.

இறுதியில் தலைவரே பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இத்தருணத்தில், நாட்டுக்காக நாம் பெரும் பங்காற்ற வேண்டும். தற்போதைய நிலைமையை கபடம், பொறாமைத்தனமாக அலசக் கூடாது. இறுதியில் நாம் அனைவரும் அரசியல் செய்து இந்நாட்டிலே வாழ்கின்றோம். எனவே நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

நாட்டின் யதார்த்தம் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமையாகும். நாட்டை இன்றும் சமகாலத்துக்கு ஏற்றால் போல் கட்டியெழுப்புவதற்கான தொலைநோக்கு, மற்றும் நடைமுறை ரீதியிலான பலமான வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுள்ளது.

சிறந்த பொருத்தமான அணியினரையும் ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கோட்டை தேர்தல் தொகுதி ஐக்கிய மக்கள் சக்தி கட்சி செயற்பாட்டாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டை வெற்றிகொள்ள ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றிபெறச் செய்ய வேண்டும். நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். வங்குரோத்தான நாட்டின் சர்வதேச நாணய நிதியத்தின் கடனை செலுத்தும் செயல்முறையை 2033 இல் தொடங்கினால் போதும் என கூறியிருந்த போதிலும் முந்தைய அரசாங்கம் அதை 2028 இல் இருந்தே மீளச் செலுத்த இணங்கியது.

கடனைத் திருப்பிச் செலுத்தும் செயல்முறை 2028 முதல் தொடங்கினால், கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையிலான பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு இன்னும் 4 வருடங்களே உள்ளன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இத்தகைய சூழ்நிலையின் முன்னிலையில், பொருளாதாரத்தை சுருக்கும் செயல்முறையை நாங்கள் ஆதரிக்க முடியாது.

பொருளாதாரம் விரிவடைந்து வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% பங்களிக்கும் நுண் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தியே பரேட் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு செயற்பட்ட போதிலும், அரசாங்கம் அரசியல் ஆதாயம் பெறுவதற்காகவே பரேட் சட்டத்தை அமுல்படுத்துவதை நிறுத்தியதாக எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் ஆகியோரை சந்தித்து இறுதியாக ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொடுத்தோம்.

ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த தொலைநோக்குப் பொருளாதாரக் கொள்கைக்கு பலம் கிடைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர் சூழல் நிலவுகிறது. இதன் விளைவாக எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்படும். ஒரு நாடு என்ற வகையில், இந்த அனர்த்தம் நாட்டிற்கு ஏற்படக்கூடிய பாதிப்பை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.

எரிபொருள் ஒரு முக்கிய காரணியாக இருப்பதால், எரிபொருளின் விலை திடீரென அதிகரிக்குமானால், இதற்கு பொருத்தமான கொள்கையை நாடு கொண்டிருக்க வேண்டும்.

மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள தொழிலாளர்களின் கதி என்னவாகும் என்பதையும் நாம் ஆராய வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

Related posts

இரண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

சனல் 4 இல் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற குழு!

இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு பஹ்ரைன் தடை