அரசியல்உள்நாடு

முன்னாள் எம்பிக்கள் இராஜதந்திர கடவுச்சீட்டினை பயன்படுத்த முடியாது – குஷானி ரோஹனதீர

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து கொடுப்பனவுகள் மற்றும் வரபிரசாதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மாதிவெல குடியிறுப்பில் நவம்பர் 14 வரை மாத்திரமே வசிக்க முடியும். இராஜதந்திர கடவுச்சீட்டினை எவரும் பயன்படுத்த முடியாது. சாதாரண கடவுச்சீட்டினையே பயன்படுத்த வேண்டும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதியினால் ஒன்பதாவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு, வருகைக்கான கொடுப்பனவு உட்பட நிதி ஊடாக சகல கொடுப்பனவுகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச வாகனங்களை கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னாள் சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் ஆகியோர் வாகனங்களை கையளித்துள்ளார்கள்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை மாதிவெல வீட்டுக்குடியிறுப்பில் வசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரச குடியிறுப்புக்களை வழங்க முடியுமா என்று மக்கள் கேள்வியெழுப்ப முடியும்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத சம்பளத்தை ஒதுக்கும் போது அவர்களின் குடியிறுப்புக்களுக்கான தொகை அறவிடப்படும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் அரச குடியிறுப்பில் வசிக்கும் போது முன்கூட்டியதாக ஒதுக்கப்பட்ட தொகை வைப்பில் இருந்து குடியிருப்புக்கான கட்டணம் அவறவிடப்படும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை இனி பயன்படுத்த முடியாது. அவர்கள் சாதாரண வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்த வேண்டும். புதிய பாராளுமன்றத்துக்கு தெரிவாகுபவர்களுக்கு மாத்திரமே இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்படும் என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை

மீண்டும் சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில்

டிஜிட்டல் ID இற்கு இந்தியாவின் உதவி