அரசியல்உள்நாடு

நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் பயணத்துக்கு நட்பு நாடுகள் ஆதரவு – ஜனாதிபதி ரணில்

இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களில் முன்னெடுத்த செயற்றிட்டத்தின் காரணமாக நாட்டை முன்னோக்கி நகர்த்தும் பயணத்துக்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட அனைத்து நட்பு நாடுகளினதும் ஆதரவும் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்துடன் இணைந்து திருகோணமலையை பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, 2025ஆம் ஆண்டு மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதன் மூலம் சமயலறை யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் வலியுறுத்தினார்.

கந்தளாய் புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (16) காலை நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மக்களினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீளப் புனரமைத்தல், கைத்தொழில் வலயம் அமைத்தல் மற்றும் வெருகல் பாலத்தை நிர்மாணித்தல் உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுப்பதாக ஜனாதிபதி அறிவித்தார்.

பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிடுகையில், இன்று தேசப்பற்றை பற்றி பேசும் சஜித்தும் அநுரவும் கடந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களை கைவிட்டு ஓடிவிட்டனர்.

இரண்டு வருடங்களின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று 38 பேர் நாட்டை மீட்க போராடி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

”2005 தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போட்டியிட்டேன். வடக்கு மக்கள் வாக்களிக்காதால் தோற்றேன். அடுத்த தேர்தலில் சந்திரிகாவுடன் போட்டியிட்டேன். 2016 இல் பிரதமராக ஐ.எம்.எப் உடன் பேசினேன். வரியைக் குறைத்தால் IMF உதவி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது.

2019 இல் நான் போட்டியிடவில்லை. கோட்டாபயவுடன் சஜித் பிரேமதாஸ போட்டியிட்டார். வரியைக் குறைக்க வேண்டாம் என்று அன்று கோரினேன். ஆனால், கேட்டாபய ஆட்சிக்கு வந்த பின் வரியைக் குறைத்தார். சர்வதேச நாணய நிதியம் உதவி வழங்குவதை நிறுத்தியது.

பொருளாதாரம் வீழ்ந்தது. வரிசையில் நீங்கள் கஷ்டப்பட்டது போதும். பிரதமர் பதவி பொறுப்பேற்கக் கேட்டு பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டது. இது கின்னஸ் சாதனையாகும். அவர்களின் நாட்டின் மீதான தேசப்பற்றும் உங்கள் மீதான அர்ப்பணிப்பும் அவ்வளவு தான்.

ஆட்சியை முன்னெடுக்க மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு எனக்கு உதவியது. அதற்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர்களின் உதவியுடன் தான் திட்டங்களை முன்னெடுத்தேன். வஜிர அபேவர்தன எம்.பி ஆதரவு வழங்கினார். ஏனைய கட்சிகளின் ஆதரவும் கிடைத்தது.

சமையலறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து சிந்தித்தே அநேகமான விடயங்களை மேற்கொண்டேன். 2025 இல் சமையலறை யுத்தத்தை நிறைவு செய்வேன்.

இவ்வாறு வீழ்ந்த நாடுகள் எழுச்சி பெற பல வருடங்கள் பிடித்தன. அரச ஊழியர்கள் வேலை நீக்கப்பட்டனர். சம்பளம் குறைக்கப்பட்டது.

ஆனால் நான் அதில் எதனையும் செய்யவில்லை. ஸ்தீரநிலை ஏற்பட்டாலும் மீண்டும் சரிவு ஏற்படலாம். உறுதியான நிலையை ஏற்படுத்தவே 5 வருட காலம் கோருகிறேன்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தைத் தவிர வேறு வழியில்லை. அந்தத் திட்டத்தைப் பாதுகாத்து முன்னேற வேண்டும். அதனால் தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மக்கள் ஆணையை கோருகிறேன்.

போட்டி நிறைந்த ஏற்றுமதி பொருளாதாரத்தை மேற்கொண்டு பணம் சம்பாதிக்க வேண்டும். அதற்காக விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இப்பகுதியில் துரியன் சாகுபடி செய்ய வேண்டும்.

துரியன் பழங்களை எடுத்து சீனாவுக்கு அனுப்பலாம். துரியன் ஏற்றுமதி மூலம் தாய்லாந்து 1,000 மில்லியன் டொலர்களைச் சம்பாதிக்கிறது. அடுத்த 05 வருடங்களில் கந்தளாய் பிரதேசத்தை விவசாய பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

மேலும், திருகோணமலை துறைமுகம் இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யப்படுகிறது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திருகோணமலைக்கு கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது. சம்பூர் சூரிய சக்தி பிரதேசமாக அபிவிருத்தி செய்யப்படுகிறது.

சுற்றுலாத் துறையும் மேம்படுத்தப்படும். இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையை அபிவிருத்தி செய்ய இருக்கிறோம். கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நாம் ஆரம்பித்த வேலைத் திட்டத்தின் காரணமாக ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளது. இந்தப் பயணத்தை நாம் தொடர வேண்டும்.

எனவே, சமையலறை பிரச்சனையைத் தீர்க்க அனைவரும் கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்:

”நாட்டை அநுரவுக்கு கொடுத்தால் நாளை நாடு இருளில் மூழ்கும். பல்கலைக்கழகங்களில் பகிடிவதை கலாசாரத்தை ஜே.வி.பி சார்ந்த குழுக்கள் தான் முன்னெடுத்தன. ஆனால் தற்பொழுது 95 வீதமான பகிடிவதைகளை நிறுத்தியுள்ளோம்.

செப்டம்பர் 22 ஆம் திகதி காலை கிழக்கில் சூரியன் உதிக்கும் போது நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகியிருப்பார். ஹாவட் பல்கலைக்கழக நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் என்னுடன் பேசினார். ஜனாதிபதி முன்னெடுக்கும் திட்டம் முன்மாதிரியானது. ஆபிரிக்காவில் வீழ்ச்சியடைந்துள்ள நாடுகளை மீட்க அவரை அனுப்ப முடியுமா என்று கேட்டார்.

பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இன்று என்ன நிலைமை ஏற்பட்டுள்ளது. நாட்டை எரித்த திசாநாயக்க போன்றவர்கள் அன்றி ரணில் போன்ற விக்ரமசிங்கவினர் தான் தேவை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல இடங்களுக்குச் சென்றேன். மூடியிருந்த கடைகளை திறக்கவும் ஓரமாக வைத்திருந்த மோட்டார் சைக்கிள்களுக்கு பெற்றோல் அடிக்கவும் கல்வி கற்பதற்கு மின்சாரம் பெற்றுத் தரவும் எடுத்த நடவடிக்கைக்காக ஜனாதிபதிக்கு வாக்களிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

நாடு எதிர்பார்ப்பின்றி இருந்தபோது தனது வீடு தீவைக்கப்பட்டும், அச்சமின்றி முன்வந்து நாட்டைக் காத்த தலைவரை ஜனாதிபதியாக்க மக்கள் தயாராக உள்ளனர்.

அரச பல்கலைக்கழகமொன்றினால் சுயாதீனமாக மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் ஜனாதிபதி 54 வீத வாக்குகளினால் வெற்றியீட்டுவார் என்ற முடிவு வெளியாகியுள்ளது.

ஆரம்பத்தில் சந்தேகம் இருந்தாலும், கடந்த 3 வாரத்தில் அந்த நிலைமை மாறியது. ஜனாதிபதி உண்மையை மட்டுமே பேசுகிறார். அதனைக் கேட்டு மக்கள் அவருடன் கைகோர்த்துள்ளனர்.

ஜனாஸா விவகாரத்தில் அரசாங்கம் என்ற வகையில் முஸ்லிங்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கோரினார். அந்த விவகாரத்தில் தவறு நடந்திருந்தது” என்றார்.

திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரள:

”பொருளாதார யுத்தம் முழு நாட்டையும் பாதித்தது. ஒவ்வொரு வீடுகளுக்கும் அதன் தாக்கம் ஏற்பட்டது. கோட்டாபயவுக்கு பதவி விலகிக் செல்ல நேரிட்டது. போரட்டத்தில் இணைந்திருந்த சில தரப்பினர் நாட்டை அராஜக நிலைக்கு செல்லும் வரை மௌனம் காத்தனர்.

ஆட்சியாளர்களை துரத்த போரட்டம் நடத்தியவர்களிடம் பிரச்சினைகளுக்கு தீர்வு இருக்கவில்லை. பொறுப்பேற்குமாறு பின்வரிசை எம்.பிகள் சென்று சஜித்திடம் கோரினோம்.

பொறுப்பேற்க ஆரம்பத்தில் விருப்பம் என்றார். கடிதம் அனுப்பினார். பின்னர் முடியாது என்றார். தேர்தல் நடத்துமாறு கேட்டார்.

மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை நிறைவு செய்ய கட்சிகள் அவருக்கு உதவி வழங்கின. அதேபோன்று தான் பொருளாதார யுத்தத்தில் வெற்றிபெற அனைத்து கட்சிகளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை வழங்கியுள்ளன.

தற்போதைய நிலையில், அனுபவம் மிக்க சர்வதேச தொடர்புள்ள ஒருவரே உகந்தவர். அவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே பொறுத்தமானவர்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தும் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்தோம். ஜனாதிபதி நாட்டை மீட்டார். மீண்டும் நாடு வீழ்ச்சியடைந்தால் எழுச்சி பெறுவது கடினம். எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெற அணிதிரள்வோம்” என்றார்.

இந்த வெற்றிப் பேரணியில் சர்வ மதத் தலைவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில பிரதம அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தீப் சமரசிங்க, கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி, ஐக்கிய மக்கள் சக்தி சேருவில அமைப்பாளர் நளின் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சேருவில முன்னாள் பிரதம அமைப்பாளர் ஆனந்த கஸ்தூரி ஆராச்சி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறுபான்மை கட்சிகள் ரணிலுடன் – பொதுவேட்பாளராக ரணில்

இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அனுமதி

ஜனாதிபதி-பொதுநலவாய செயலாளர் நாயகம் இடையில் சந்திப்பு!