சூடான செய்திகள் 1

விக்னேஸ்வரனின் கருத்தால் எழுந்துள்ள சர்ச்சை

(UTV|COLOMBO)-“பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிடமுடியாது” என இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திங்கள்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும் என்பதே எங்களுடையது முக்கிய நோக்கம் என சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார்.

அது, மத்தியில் உள்ள அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி, சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அவரது கருத்து தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் ​நேற்று (04) ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“நாங்கள் எங்கள் உரிமைகள் பற்றியோ பாதுகாப்பு பற்றியோ பேசும் போது எம்மைப் பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் அழைப்பதை நிறுத்துமாறு கோருகின்றேன்.

வடமாகாணத்தின் தற்காலப் பாதுகாப்பற்ற நிலையையும் முன்னைய பாதுகாப்பான நிலையையும் பற்றி விமர்சிக்க எவருக்கும் உரிமை உண்டு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“நான் விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொண்ட கூட்டத்தில் இருந்தேன். ஆனால் கௌரவ விஜயகலா கூறிய சொற்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஒலிவாங்கியில் ஏதோ பிழை இருந்தது. பின்னர் அவரிடமே கேட்டறிந்தேன்.

இன்றைய பாதுகாப்பற்ற நிலை மாறி பாதுகாப்பான சூழல் ஏற்பட வேண்டும் என்று அவர் கூறியதில் என்ன பிழை என்று எனக்குத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“முன்பு எமது மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள் என்பது உண்மை. போர்க்காலத்தில் ஒரு பெண் தனிமையில் நகை நட்டு அணிந்து கொண்டு சூரிய அஸ்தமனத்தின் பின்னர் வீடு நோக்கி நடந்து சென்றால் அவருக்கு எந்தத் தொந்தரவோ பாதிப்போ ஏற்படாதிருந்தது என்பது உலகறிந்த உண்மை.

இன்று அப்படியா? வாள்வெட்டு, வன்புணர்ச்சி, வன்செயல்கள், போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்து வருகின்றன. இலஞ்ச ஊழல்கள் மலிந்து காணப்படுகின்றன.

அதனால்தான் நான் இராணுவத்தைத் திரும்ப அழையுங்கள், பொலிஸ் அதிகாரங்களை எமக்குத் தாருங்கள். சகல வன்முறைகளையும் நிறுத்திக் காட்டுகின்றோம் என்று கூறியுள்ளேன்” என அந்த அறிக்கையில் ஆவேசமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

“நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் தெற்கில் உள்ளவர்கள் தமது உள்ளார்ந்த வெறுப்புக்களைப் பிரதிபலிப்பது வருத்தத்திற்கு உரியது. இவ்வாறான தெற்கத்தையவர்களின் நடவடிக்கைகள் கௌரவ விஜயகலாவிற்கு எதிரானது அல்ல. தமிழர் மீதான சந்தேகம், வெறுப்பு, பயம் யாவற்றையும் பிரதிபலிக்கின்றது” என்று விமர்சித்துள்ளார்.

“எமது பேச்சுக்களை விமர்சிக்காமல் எங்களுடன் ஒற்றுமையாகப் பேச முன்வாருங்கள். சமஸ்டி அரசியல் அமைப்பொன்றை நிறுவ முன்வாருங்கள் என்று தெற்கத்தைய அரசியல்வாதிகளிடம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்”

“அத்துடன் அந்த நாள் இன்று வந்திடாதோ என்று கௌரவ விஜயகலா கூறுவதால் அவர் தீவிரவாதி ஆகிவிட முடியாது. புலிகள் காலத்தில் எம் மக்கள் (யுத்தத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களை விட) பொதுவாகப் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மை.

ஆகவே கௌரவ விஜயகலா தனது கடமைகளைத் தொடர்ந்து பணியாற்ற அவரின் கட்சி இடமளிக்க வேண்டும். அவர் தேசியக் கட்சியில் இடம்பெறுவதால் தமிழச்சி என்ற அந்தஸ்தை இழந்தவராகக் கணிக்கக்கூடாது. கௌரவ விஜயகலா அவர்களின் சுதந்திரமும் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று தனது அறிக்கையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருக்கிறார்.

தனது கட்சியைச் சேர்ந்த விஜயகலா மகேஸ்வரன் சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்த நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அறிக்கை அந்த சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது.

பிபிசி

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நிதி மோசடி செய்து சிக்கிய போலி வைத்தியர்

நான்கு மாத காலத்திற்குள் இலத்திரனியல் சுகாதார அட்டைகள்

நாளாந்தம் ஒரு மணித்தியால மின்வெட்டு