சூடான செய்திகள் 1

சமூக தொழில் முயற்சியாண்மை இலங்கையில் வேரூன்றி வருவது பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் தரும்

(UTV|COLOMBO)-உலக பொருளாதார அபிவிருத்தியின் பிரதான பாத்திரமாக விளங்கும் சமூக தொழில் முயற்சியாண்மை, தற்போது படிப்படியாக வேரூன்றி வருவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வெறுமனே இலாபத்தை மையமாகக்கொண்டு ஆரம்பிக்கப்படும் தொழில் முயற்சியாண்மையை விட சமூக தொழில் முயற்சியாண்மையானது, பிரதானமாக சேவைகளையும், இலாபத்தையும் மையமாகக்கொண்டு இயங்கி வருவது, நமது நாட்டுக்கு மிகவும் அத்தியவசியமானது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் கவுன்சிலும், ஐக்கிய நாடுகளின் எஸ்கேப் நிறுவனமும் இணைந்து மேற்கொண்டுள்ள தேசிய ரீதியிலான, சமூக தொழில் முயற்சியாண்மை ஆய்வு தொடர்பான அறிக்கையை வெளியிட்டு வைக்கும் நிகழ்விலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு, தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று காலை (28) இடம்பெற்ற இந்த விழாவில், அமைச்சர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் தாஜுதீன், ஐ.நா எஸ்கேப் நிறுவனத்தின் புத்தாக்க வர்த்தக முயற்சி மற்றும் பிரதம தொழில்நுட்பவியலாளருமான ஜொனதான் வோர்ன், பிரிட்டிஷ் கவுன்சிலின் இலங்கைக்கான பணிப்பாளார் கில் கல்டிகொட் மற்றும் சமூக தொழில் முயற்சியாண்மைத் துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், கல்வியியலாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

“விவசாய சங்கங்கள், தர்ம நிதியங்கள் மற்றும் கூட்டுறவுச்சங்கங்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகளால் இலங்கையானது, சமூக தொழில் முயற்சியாண்மையை ஒத்த நீண்ட வரலாற்றைக் கொண்டிருந்த போதும், அவை சமூக தொழில் முயற்சியாண்மை என்ற செயற்பாட்டுத் தளத்துக்குள் இன்னும் சரியாக உள்வாங்கப்படவில்லை. இலங்கையில் சமூக தொழில் முயற்சியாண்மை குறித்த ஆய்வுகள் அடங்கிய அறிக்கை ஒன்று, தேசிய ரீதியில் வெளியிட்டு வைக்கப்படுவது இதுவே முதற்தடவை ஆகும்.

சமூக முதலீட்டுக்கான தாக்கம் இலங்கையில் இன்னும் அறிமுகப்படுத்தப்படாததன் குறை கடந்தகாலத்தில் இருந்ததுடன், இது பிரபல்யப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தி நின்றது.

இலங்கையில் சமூக தொழில் முயற்சியாண்மை பல்வேறு உதாரணங்களால் அறியப்பட்டிருந்த போதும், நுகர்வோர் மத்தியிலே எதுவுமே தெரியாத ஒரு நிலையிலேயே இருந்து வந்தது. நெசவுக் கைத்தொழில் போன்றவை நல்ல வாய்ப்பையும், சிறந்த சந்தையையும் கொண்டவைகளாக இருந்தது மாத்திரமன்றி, உள்ளூர் நுகர்வாளர்களுக்கிடையே இது அறிமுகமானதாக இருந்த போதும், சமூக தொழில் முயற்சியாண்மை இவைதான் என்று நுகர்வோர் தெரியாத நிலையே இருந்தது. அத்துடன், இதற்குப் பதிலாக சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மையும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கையில் பெயர் பெற்று விளங்குகின்றது.

உதாரணமாக, சித்திரா லேன் சமூகநல நிதியம் என்ற அமைப்பு 40 வருடங்களாக இயங்கி வருகின்றது. விஷேட கல்வி, விஷேட தேவையுடைய பிள்ளைகளுக்கான சேவைகளை வழங்கி வரும் இந்த சமூக அமைப்பு, சமூக தொழில் முயற்சியாண்மை என்று அறியப்பட்டதைக் காட்டிலும், தரும நிதியமாகவே மக்களால் பார்க்கப்படுகின்றது.

விவசாயம், மீன்பிடி, சேவைகள், சுற்றுச்சூழல், கல்வி, சுகாதாரம் போன்றவையும், சமூக தொழில் முயற்சியாண்மையை நோக்கியே நகர்ந்து செல்கின்றன.

இன்று வெளியிட்டு வைக்கப்பட்ட இந்த அறிக்கையில், சுவாரஷ்யமான பல சமூக பொருளாதார விடயங்கள் வெளிவந்துள்ளன. இந்த அறிக்கையானது கொள்கை ரீதியான நமது கவனத்தை ஈர்க்கின்றது.

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மை துறைகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் எனக்கு பரிச்சயப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. எனது அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA) இந்தத் துறை தொடர்பான அபிவிருத்தியை முன்னெடுத்து வருகின்றது.

இலங்கையின் சமூக தொழில் முயற்சியாண்மை அபிவிருத்திக்கு எனது அமைச்சின் கீழான நெடா நிறுவனம் காத்திரமான பங்களிப்பை நல்கும் எனவும். நெடா நிறுவனத்தினால் தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மேலும் நவீனமயப்படுத்தப்பட்டு, சமூக தொழில் முயற்சியாண்மை அபிவிருத்திக்கு உத்வேகம் அளிக்குமெனவும் நம்புகின்றேன். நாங்கள் இத்துறை தொடர்பாக மேலும், ஆழமான அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கருதுகின்றேன்” இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சர்வதேச கூட்டுறவு முக்கியஸ்தர் இளைஞர் கூட்டுறவு சம்மேளனத்துடன் முக்கிய பேச்சு

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக விசேட ஆலோசனை சபை