வகைப்படுத்தப்படாத

மக்கள் சேவையில் பிரிந்து இருக்காமல் ஒன்றுபட்டு பொறுப்புக்களை நிறைவேண்டும் – கொட்டகலையில் ஜனாதிபதி தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – மக்கள் சேவையை நிறைவேற்றுவதில் பிரிந்து இருக்காமல் நாட்டுக்காக ஒன்றுபட்டு பொறுப்புக்களை நிறைவேற்றுமாறு தேசிய, மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளிடமும் தான் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று  பிற்பகல் கொட்டகலை சீ.எல்.எப்.தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அனைத்து பிரஜைகளையும் அரசாங்கம் சமமான வகையிலேயே நோக்குவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுப்பதில் கட்சி, இனம், சமயம் என்ற வேறுபாடுகள் கிடையாது என்று தெரிவித்தார்.

நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களும் சமாதானமாக  வாழ்வதற்கான உரிமையையும் தேவையான வசதி வாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்களை வறுமையில் இருந்து விடுவித்து, அவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத்தரத்தை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் கூறினார்.

நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட மலையகத்தில் வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்ததுடன் கட்சி உறுப்பினர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

சமிபத்தில் தலவாக்கலையில் நிகழ்வு ஒன்றுக்காக ஹெலிகொப்டரில் பயணித்த வேளையில் சீரற்ற காலநிலையின் காரணமாக நான் பயணித்த ஹெலி கொட்டகலையில் தரையிறங்கியது.

அப்பொழுது அங்கு வந்த பிரதேச மக்கள் என்னிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். கொட்டகலை வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி ஒன்று தேவை என கேட்டனர்.

ஒரு வாரத்தில் தருகிறேன் என ஒப்புக்கொண்டேன். அதன் பிரகாரம் கடந்த வாரம் அம்புலண்ஸ் வண்டியை வழங்கினேன். அதேபோன்று இப்பகுதி பாடசாலைகளில் கழிவரை குறைபாடுகள் நிலவுவதாக தெரிவித்தனர்.

அதற்கு கூடிய விரைவில் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு  அதிகாரிகளுக்கு உத்தரவுவிடுத்துள்ளேன்.  சுமார் 20 தொடக்கம் 25 வருட காலப்பகுதியில் தொண்டமான் அவர்களுடன் கைகோர்த்து சேவை செய்து வருகின்றேன்.

பாராளுமன்றத்தில் அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமான் இருந்த காலப்பகுதியில் மலையக மக்களின் உரிமை தொடர்பாகவே அவர் குரல் எழுப்பி வந்தார். அதேபோன்று ஆறுமுகன் தொண்டமானும் மலையக மக்களுக்காக அபிவிருத்தி வேலைகளை செய்ய வேண்டும் என என்னை சந்தித்து பேச்சு நடத்தினார்.

தோட்ட தொழிலாளர்களும் வறுமை கோடடிற்குள் உள்ளடங்குவார்கள் எதிர்வரும் காலத்தில் இந்த வறுமையை இல்லாதொழிப்பதற்காக இந்த வருடத்தை வறுமை ஒழிப்பு வருடமாக நான் செயல்படுத்தி வருகின்றேன். உணவு அபிவிருத்தி விவசாய திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் போது அடுத்த மாத அளவில் காலநிலை சீராகும் பட்சத்தில் இத்திட்டத்தை துரிதப்படுத்த ஏதுவாக அமையும்.

வறுமை தலைதூக்குவதற்கு காரணம் மதுபானம், சிகரட், கஞ்சா ஆகிய போதை பொருட்களை பாவிப்பதனாலும் பணத்தை வீண் விரயோகம் செய்வதனாலும் வறுமையை ஒழிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்திய்யணிகள் வேலைகளை மலையக மக்களுக்காக செய்யும் அதேவேளை மலையக பிரதேசங்களான பதுளை, இரத்தினபுரி, மாத்தளை, கண்டி ஆகிய பகுதிகளிலும் வறுமை ஒழிப்பு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தொண்டமான் அவர்கள் இன்று அரசாங்கத்தின் ஒரு அங்கமாக செயல்படுகின்றார். வரவு செலவு திட்டத்தில் 64 மேலதிக வாக்குகள் எமது அரசுக்கு கிடைத்தது. இதில் இ.தொ.காவும் வாக்களித்து வரவு செலவு திட்டத்தை வெற்றியீட்ட செய்தனர்.

அப்பொழுது கூட மலையக மக்களுக்கு அபிவிருத்தி பணிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கில் என்னிடம் இவர்கள் வழியுறுத்தினர்என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

அமைச்சர்களான அர்ஜூன ரணதுங்க, பைசர் முஸ்தபா, மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான். பி.இராமேஸ்வரன் மாகாண அமைச்சர்கள் உள்ளிட்டேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related posts

சீனாவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 44 பேர் உயிரிழப்பு…

எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்

ஈராக் போராட்டத்தின் வன்முறையில் ஒருவர் பலியானதுடன் 24 பேர் படுகாயம்