டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச் செல்ல பாரிய அடியெடுத்து வைக்கும் வகையில் புதிய 03 டிஜிட்டல் தளங்கள் ஜனாதிபதி தலைமையில் நாளை அறிமுகம்
டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச் செல்ல பாரிய அடியெடுத்து வைக்கும் வகையிலான 03 புதிய டிஜிட்டல் தளங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நாளை (07) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
அரசாங்கத்தின் அனைத்துவிதமான கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் மயமாக்கும் GOVPAY வசதியை நடைமுறைப்படுத்தல், இதுவரையில் கொழும்பு தலைமை அலுவலகத்தில் மாத்திரம் இடம்பெற்ற ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலாளர் அலுவலகங்கள் வரையில் கொண்டுச் செல்லுதல் மற்றும் வௌிநாட்டு தூதரகங்களில் இலத்திரனியல் முறையில் பிறப்பு,திருமண மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வசதியை வௌிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான (EBMD)வசதியளித்தல் என்பன நாளை முதல் ஆரம்பிக்கப்படும்.
இது தொடர்பில் தௌிவுபடுத்துவதற்கான ஊடக சந்திப்பில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன தலைமையில் இன்று (06) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றது.
இதில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளரும் ஜனாதிபதி நிதிய செயலாளருமான ரொஷான் கமகே,வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் எம்.கே.பத்மநாதன், இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் ஹர்ஷ புரசிங்க, Lanka Pay நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சன்ன டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் இதன்போது கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கமைய டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச் செல்லும் வேலைத்திட்டத்தை நனவாக்கி, இந்த புதிய தளத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன இதன்போது தெரிவித்தார்.
நிதியை அடிப்படையாக கொண்ட கொடுப்பனவுகள் ஊழல், மோசடிகள் அதிகரிக்கவும் கொடுக்கல் வாங்கல் முறையின் வினைத்திறனற்ற நிலைக்கு காரணமாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர் இந்த சவால்களுக்கு முகம்கொடுக்க அனைத்து அரச கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், டிஜிட்டல் கொடுப்பனவை ஊக்குவிப்பதன் ஊடாக மக்களுக்கு மிகவும் வசதியான மற்றும் நம்பகமான சேவையை வழங்க முடியுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
1978 ஆண்டில் சேவையை ஆரம்பித்த ஜனாதிபதி நிதியம், இதுவரையில் கொழும்பு தலைமை அலுவலகத்தில் மாத்திரமே விண்ணப்பங்களை பொறுப்பேற்றதாகவும் நாளை முதல் நாடளாவிய ரீதியிலிருக்கும் 341 பிரதேச செயலாளர் அலுவலகங்களில் அந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையின் கீழ் பயிற்றுவிக்கப்பட்ட பணிக்குழுவினரால் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அந்த பதிவுகள் மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரொஷான் கமகே தெரிவித்தார்.
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டுச் செல்வதற்கும் அதனூடாக உரிய வகையில் கிடைக்க வேண்டியவர்களுக்கு அந்த சேவையை பெற்றுக்கொடுக்கும் இயலுமை காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வௌிநாடுகளிலிருக்கும் இலங்கையர்களுக்கு நலன்புரி சேவைகளை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் எனவும்,வௌிநாடுகளில் இருக்கும் இலங்கையர்களுக்கு அந்தந்த நாடுகளிலிருக்கும் தூதரகங்கள் ஊடாக வினைத்திறன் மிகுந்த மற்றும் வசதியான சேவையை வழங்கும் நோக்கில் இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் ஊடாக தூதரகங்கள் மூலம் பிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்களை பெற்றுக்கொடுப்பதற்கான EBMD வசதி நாளை ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படுமென வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் எம்.கே.பத்மநாதன் தெரிவித்தார்.
தற்போது பிறப்பு,திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள காலதாமதமாகும் முறைமைக்கு பதிலாக தொழில்நுட்பத்தின் மூலம் தூதகங்களுக்கு பதிவாளர் நாயகம் திணைக்களத்துடன் தொடர்புகொண்டு சான்றிதழ்களின் பிரதிகளை பெற்றுக்கொண்டு தூதரகங்கள் ஊடாக பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் நாளை முதல் செயற்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
GovPay வசதிகளை வழங்கும் அரச நிறுவனங்கள் தொடர்பிலான விபரத்தை நாளை (07) மதியம் 12 மணிக்கு பின்னர் GovPay.lk இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், இது தொடர்ச்சியான வேலைத்திட்டம் எனவும் அனைத்து அரச நிறுவனங்களையும் டிஜிட்டல் மயமாக்கிய பின்பே இந்த திட்டம் நிறைவடையும் என்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் பணிப்பாளர் ஹர்ஷ புரசிங்க தெரிவித்தார்.
-ஜனாதிபதி ஊடகப் பிரிவு