வகைப்படுத்தப்படாத

சிறந்த தார்மீக ஊடகக் கலாசாரத்தைக் கட்டியெழுப்பும் பணியில் அரச ஊடகங்கள் முன்னணி வகிக்க வேண்டும் – ஜனாதிபதி [PHOTOS]

(UDHAYAM, COLOMBO) – சிறந்த தார்மீக ஊடகக் கலாசாரத்தைக் கட்டியெழுப்பும் பணியில் அரச ஊடகங்கள் முன்னணி வகிக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் 38 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நிருவாகக் கட்டிடத்தொகுதியைத் திறந்துவைக்கும் நிகழ்வில் நேற்று  முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த நாட்டில் அரச ஊடகங்களை வரலாற்றில் மிக மோசமாகவும் பண்பாடற்ற முறையிலும் பயன்படுத்திய சந்தர்ப்பம், தான் பொது அபேட்சகராக ஜனாதிபதித் தேர்தலில் கலந்துகொண்ட சந்தர்ப்பமாகும் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அன்று தமக்கெதிராக முன்வைக்கப்பட்ட அவதூறுகள் வேறு எந்தவொரு அரசில்வாதிக்கு அல்லது ஜனாதிபதி அபேட்சகருக்கு எதிராக முன்வைக்கப்படவில்லை என்றும்  ஜனாதிபதி கூறினார்.

வருடாவருடம் முன்னேற்றமடைவதற்குப் பதிலாக இரண்டரை வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டின் அரச ஊடகங்கள் மிக மோசமான நிலையை அடைந்திருந்தது. அத்தகைய மோசமான நிலை எதிர்காலத்தில் ஊடகத்துறைக்கு ஏற்படக்கூடாது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்தகைய போலிப்பிரசாரங்களை அன்று தமக்கெதிராக முன்வைத்தமை ஒரு சிறிய வறிய குடும்பத்தைச் சேர்ந்த நான் பெரும்  மனிதர் என எண்ணிக்கொண்டிருந்தவர்களுக்கு பெரும் சவாலாக இருந்த காரணத்தினாலாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தான் ஜனாதிபதி பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டது தனது குடும்பத்தில் எவரையும் ஜனாதிபதி பதவிக்கோ அல்லது பிரதமர் பதவிக்கோ கொண்டுவருவதற்காக அல்ல. எதிர்காலத்திலும் அனைத்து சவால்களுக்கும் முகம்கொடுத்து நாட்டுக்காவும் மக்களுக்காவும் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கேயாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சிறந்த ஊடகத்துறையின் மூலமே சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க முடியும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, சுதந்திர ஊடகத்தின் கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து ஊடக நிறுவனங்களின் தலைவர்களும் முகாமைத்துவமும் ஊடகவியலாளர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் ஐந்து மாடிகளைக்கொண்ட புதிய நிருவாகக் கட்டிடத்தொகுதியை திறந்து வைத்த ஜனாதிபதி; விசேட விருந்தினர் புத்தகத்திலும் நினைவுக்குறிப்பொன்றை பதிவு செய்தார்.

தெற்காசியாவின் முதலாவது வர்ணத்தொலைக்காட்சி சேவையான சுயாதீன தொலைக்காட்சிச் சேவையின் தொல்பொருள் கூடத்தையும் ஜனாதிபதி திறந்துவைத்தார்.

ஊடக நிறுவனத்தின் வெளிக்கள ஒளிபரப்பு வாகனம் மற்றும் புதிய ஒளிப்பட கட்டிடத்தொகுதியையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

கோட்டே ஸ்ரீ தர்மமகா சங்கசபையின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் ஏனைய சமயத் தலைவர்கள் அமைச்சர்களான மங்கள சமரவீர, கயந்த கருணாதிலக்க, நிதி அமைச்சின் செயலாளர் ஆர் எச் எஸ் சமரதுங்க, சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் தலைவர் ரொஸ்மன்ட் சேனாரத்ன, சுயாதீன  தொலைக்காட்சிச் சேவையின் பதில் தலைவர் சமன் அதாவுட ஹெட்டி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/g.jpg”]

 

Related posts

உலகின் மிகப் பெரிய பணக்காரர் விவாகரத்து இழப்பீடாக 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுக்க ஒப்பு

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அறிவித்தார் டிரம்ப்

Emmy winning actor Rip Torn passes away at 88