உள்நாடு

அம்பாறையில் மீண்டும் மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அம்பாறையில் நிலவிவரும் மழையுடனான காலநிலை காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சில இடங்களில் மழை குறைந்த போதிலும் பலத்த காற்று வீசி வருவதன் காரணமாக மக்களது அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாவிதன்வெளி, கல்முனை முஸ்லிம் பிரிவு, தமிழ் உப பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரதான போக்குவரத்து பாதைகள் சில வெள்ளக்காடாக காட்சி தருவதனால் தூர இடங்களுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளதோடு உள்ளூர் வீதிகள் அனைத்திலும் நீர் நிரம்பி வழிகின்றது.

நேற்றும் (13) இன்றும் (14) திடீரென ஏற்பட்ட அடை மழை காரணமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை, பிரதேச பிரதான பாதைகளில் நீர் நிரம்பி ஓடுவதுடன் வாகன சாரதிகள் பாதசாரிகள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.

மேலும் குறித்த மழை காரணமாக வீடுகள், வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதுடன் அவற்றை வெளியேற்றும் முயற்சியில் பாதிக்கப்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். பகல் நேரத்தில் பயணிக்கும் வாகனங்கள் முன்விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டு பயணிப்பதையும் அவதானிக்க முடிந்தது. அம்பாறை மாவட்டத்தில் திடீரென மழை பெய்து வருவதுடன் வீதிகள் குடியிருப்புக்கள் என பல இடங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

சில வீதிகளில் வடிகான்களுக்கு மேலாக மழை நீர் பரவுவதால் வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் அதனை தடுப்பதற்கான நடவடிக்கையினை பொது மக்கள் மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் வடிகான்களை விரைந்து சீர்செய்யுமாறு கல்முனை மாநகர சபையிடம் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

-பாறுக் ஷிஹான்

Related posts

ரயில் சேவையும் முடங்கும் நிலை

ராஜித சேனாரத்னவுக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு

ஜனாதிபதி ரணில் பொய் சொல்கிறார்