அரசியல்உள்நாடு

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்க கூடாது – உதய கம்மன்பில

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிப் பெறும். எளிய பெரும்பான்மை பலத்தையே மக்கள் வழங்க வேண்டும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினால் அரசாங்கமும் இல்லாதொழியும், நாடும் பாதிக்கப்படும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (1) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை மீள பெற்றுக் கொண்டுள்ளமை சிறந்த தீர்மானமாகும்.

அரச பாதுகாப்பினை பெறுவதாயின் ஒன்று மக்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும் அல்லது உயிரச்சுறுத்தல் ஏதும் காணப்பட வேண்டும்.

நாங்கள் தற்போது மக்கள் பிரதிநிதிகள் அல்ல ஆகவே விசேட பாதுகாப்பு அவசியமற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் அரசியலுக்கு பிரவேசிப்பதற்கு முன்னர் வகித்த அரச உயர் பதவிகளை துறந்துள்ளார்கள்.

அவர்களால் இனி அரச சேவையில் இணைய முடியாது. ஆகவே ஓய்யூதிய கொடுப்பனவு தொடர்பில் எடுத்துள்ள தீர்மானத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.

சஜித் – ரணில் மற்றும் அவர்களை நம்பியுள்ள தரப்பினர் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் படுதோல்வியடைவார்கள்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அரசியலில் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிப் பெறும். மக்கள் எளிய பெரும்பான்மையை ஜனாதிபதிக்கு வழங்க வேண்டும். ஏனெனில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினால் அரசாங்கமும், நாடும் இல்லாதொழியும்.

முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர் ஜயவர்தன, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டபய ராஜபக்ஷ ஆகியோருக்கு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான பாராளுமன்றத்தை வழங்கினார்கள்.

இறுதியில் அரசாங்கம் பாரிய நெருக்கடிகளே தோற்றம் பெற்றன. ஆகவே எந்த அரசாங்கத்துக்கும் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இனி வழங்க கூடாது என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

இம்ரானுடனான சந்திப்பு உறுதியானது

கடந்த 24 மணிநேரத்தில் 41 பேர் கைது

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து தேர்தல் ஆணையம் கவலை