அரசியல்உள்நாடு

தலதா அத்துகோரள சஜித்துக்கு முதுகில் குத்தியுள்ளார் – முஜிபுர் ரஹ்மான்

ஐக்கிய தேசிய கட்சியை பிளவுபடுத்தி சஜித் பிரேமதாச தலைமையில் கட்சி அமைக்க பிரதானமாக செயற்பட்ட தலதா அத்துகோரள தற்போது கட்சி பிளவுபட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என முதலைக்கண்ணீர் வடிக்கிறார்.

இறுதி நேரத்தில் கட்சியை விட்டு செல்வதன் மூலம் அவர் சஜித் பிரேமதாசவுக்கு முதுகில் குத்தியுள்ளார் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிவிட்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுச்சென்றமை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சிக்குள் தலைமை பதவி தொடர்பில் பிரச்சினை வந்தபோது, சஜித் பிரேமதாசவுக்கு தலைமை பதவி வழங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவர்களில் தலதாவும் ஒருவர். ஐக்கிய தேசிய கட்சியில் சஜித் பிரேமதாசவுக்கு தலைமை பதவி கிடைக்காத நிலையில் கட்சியில் இருந்து வெளியேறி, சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கட்சி ஒன்றை உருவாக்கவும் அவர் முன்னிருந்து செயற்பட்டார். அதனால் பாராளுமன்றத்தில் அவர் தெரிவித்த கருத்து பொய் என்பதை அவரின் மனசாட்சி சொல்லும்.

ஐக்கிய தேசிய கட்சியை பிளவுபடுத்தி, தற்போது தலைவர்கள் இரண்டுபேரும் இரண்டு முனைகளில் போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிப்பது, புதுமையாக இருக்கிறது. ரணில் விக்ரமசிங்க தனது ஜனாதிபதி கனவுக்காக, ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கை, சின்னம் என அனைத்தையும் விட்டு, இனவாதிகளுடனும்,திருடர்களுடனும் கைகோர்த்துக்கொண்டுள்ளார்.

அதேபோன்று மஹிந்தானந்த, பிரசன்ன ரணதுங்க, ராேஹித்த அபேகுணவர்த்தன போன்றவர்கள் தங்களின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் என்றே தற்போதும் தெரிவிக்கின்றனர். அவ்வாறு இருக்கும்போது ரணில் விக்ரமசிங்கவுடன் நாங்கள் எவ்வாறு கைகோர்த்துக்காெள்ள முடியும் என கேட்கிறோம்.

அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் தற்போது மோசடி காரர்கள் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

எங்களுடன் இணைந்துகொண்டுள்ளவர்களில் யாருக்காவது மோசடி குற்றச்சாட்டு இருக்கிறதா? அல்லது நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் இருக்கின்றதா என கேட்கிறோம்.

ஆனால் அவர் தெரிவிக்கும் மோசடி காரர்கள் அனைவரும் ரணில் விக்ரமசிங்கவுடனே இருக்கிறனர். மஹிந்தானந்த அளுத்கமகே டொப் டென் என பத்து பேரின் பெயரை குறிப்பிட்டு எமது அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்களுக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டு தெரிவித்து வந்தார்.

அந்த 10பேரில் ஆரம்பமாக இருந்தவர் தலதா அத்துகோரளவின் பெயராகும். தலாதா மோசடிகாரர் என குற்றம் சாட்டிய மஹிந்தானந்தவும் தற்போது ரணில் விக்ரமசிங்கவுடனே இருக்கிறார்.

எனவே கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டியிடும்போது தலதா அத்துகோரள ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டே வெற்றிபெற்றார்.

அப்போது கட்சி பிளவுபடுவதை கண்டுகொள்ளாத அவர் தற்போது ஐக்கிய தேசிய கட்சி பிளவுபட்டிருப்பதாக முதலைக்கண்ணீர் வடிக்கிறார் என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

சிலாபம் – கொழும்பு வீதியில் கோர விபத்து – 25 பேர் வைத்தியசாலையில்.

77% வாக்காளர் அட்டைகள் விநியோகம்

editor

ரயில் சேவைகள் மந்தகதியில்