அரசியல்உள்நாடு

ரணில் சொல்வதைச் செய்யும் தலைவர் – சம்பள அதிகரிப்பை வழங்கியே தீருவோம்

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தேர்தல் வாக்குறுதி அல்ல. மாறாக அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் உள்வாங்குவதற்கு அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்டதொன்றாகும். ரணில் விக்ரமசிங்க சொல்வதைச் செய்யும் தலைவர்.

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கியே ஆகுவோம் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுஎமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை  (22)  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்குத் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு வீழ்ச்சியடைந்த நிலையில் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துச் சென்றது. என்றாலும் தற்போது படிப்படியாக நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தியடைந்து வருகிறது. அதன் பிரகாரம் மக்களின் வருமானமும் அதிகரிக்க வேண்டும்.

அதனால் மக்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகிறார். தொழில் முயற்சியாளர்களை அதிகரித்து அவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வாழ்க்கைச்செலவு அதிகரிக்கும்போது, அதற்கு ஏற்றவகையில் நாளாந்த சம்பளத்துக்குத் தொழில் செய்பவர்கள் தங்களின் நாட்சம்பளத்தை அதிகரித்துக்கொள்கின்றனர்.

ஆனால் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொள்வதாக இருந்தால், அதற்கு திறைசேரியின் அனுமதி பெற்று முறையாக மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கிறது.

அதனால் இந்த நடவடிக்கையை முறையாக மேற்கொண்டு தற்போது அரச ஊழியர்களுக்கு 25ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான அமைச்சரவையும் அனுமதி வழங்கி இருக்கிறது.

அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டு. ஜனவரி முதல் அதனை வழங்க நடவடிக்கை எடுப்போம். இது தேர்தலை இலக்கு வைத்துத் தெரிவிக்கப்படும் வாக்குறுதி என யாரும் நினைக்க வேண்டாம். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விடயமாகும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சொல்வதையும் செய்யும் தலைவர் என்பது அரச ஊழியர்களுக்கு தெரியும். ஏனெனில் அரச ஊழியர்களுக்கு ஏற்கனவே 10ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கியது ரணில் விக்ரமசிங்க என்பது அவர்களுக்கு தெரியும்.

மேலும் இந்த ஜனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகும். பாராளுமன்ற தேர்தலில் மக்கள் யாரை வேண்டுமானாலும் நிராகரிக்கலாம்.

ஆனால் இந்த தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களுடன் களமிறங்கியுள்ளார்.

அதனால் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தால் இந்த நாடு தோல்வியடையும். நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால் மீண்டும் கட்டியெழுப்ப முடியாத நிலைக்குத் தள்ளப்படும் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு!

மலேசிய துணைப் பிரதமரை சந்தித்த செந்தில் தொண்டமான்.

இனவாதத்திற்கு இடமில்லை – அநுர

editor