உள்நாடுகல்விசூடான செய்திகள் 1

ஹிஜாப் அணிந்ததால் : 13 முஸ்லிம் அதிபர்களின் பெறுபேறுகள்  இடை நிறுத்தம்

(UTV செய்தியாளர்) ஹிஜாப் அணிந்து வினைத்திறன்காண் தடை தாண்டல்  பரீட்சைக்கு தோற்றியமைக்காக, மேல் மாகாணத்தின் 13 முஸ்லிம் அதிபர்களின் பெறுபேறுகள்  இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன‌.

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு பாதிக்கப்பட்ட அதிபர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  நேற்று இந்த விசாரணைகள் இடம்பெற்ற போதும், மனித உரிமைகள் ஆணைக் குழு முறைப்பாட்டில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள பரீட்சை திணைக்கள அதிகாரிகள்  விசாரணைகளுக்கு சமூகமளித்திருக்கவில்லை.

இதனையடுத்து இந்த விசாரணைகள் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுளது.  கடந்த 2023 ஆம் ஆண்டு  அதிப‌ர் சேவை தரம் 2 இல் இருந்து தரம் ஒன்றுக்கு தரமுயர்த்துவதற்கான வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சை இரு தினங்களில் நடாத்தப்பட்டிருந்தன.  முதல் நாள் 6 மணி நேரம் பரீட்சை எழுதியுள்ள பரீட்சார்த்திகள் மறு நாள் பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் போது, இறுதி 20 நிமிடங்களுக்குள் அங்கு வந்த அதிகாரிகளின் அசெளகரியங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பரீட்சார்த்திகளின் அடையாள அட்டைகளை பெற்று அவர்கள‌து பரீட்சை அனுமதிச் சீட்டுடன் வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரியில்  நடந்த இந்த பரீட்சையில் 7 ஆம் இலக்க பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் அதிபர்களே இந்த அநீதிக்கு முகம் கொடுத்துள்ளனர்.  இந் நிலையில், வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சை பெறுபேறுகள் கடந்த ஜூன் 5 ஆம் திகதி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பெறுபேறுகளை பரீட்சித்த போது, ஹிஜாப் அணிந்து பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் அதிபர்கள் 13 பேரினதும் பெறுபேறுகள் வெளியிடப்படாமல்  இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பரீட்சைக்கு தோற்றும் போது காதுகளை காட்டி பரீட்சிக்கப்பட்ட பின்னரேயே அனைவரும் தோற்றியதாகவும்,  முதல் நாள் எந்த சிக்கலும் ஏற்படாத நிலையில், முதல் நாள் பாடத்தின் பெறுபேறுகள் கூட நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

பரீட்சைகளின் பின்னர் குறித்த 14 முஸ்லிம் அதிபர்களும் பரீட்சைகள் திணைக்ள‌த்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அப்போதும் தாம் எந்த தவறும் செய்ததாக குற்றம் சாட்டப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.  பரீட்சை எழுதும் போது காதினை வெளிக்காட்டியவாறு  பரீட்சை எழுத வேண்டும் எனும் சுற்று நிருபத்தை, மாணவர்களுக்கும்  சென்று நீங்கள் அறிவிக்க வேண்டும் என்பதற்காகவே எம்மை அழைத்ததாக பரீட்சை திணைக்கள அதிகாரிகள அப்போது கூறியதாக, பாதிக்கப்பட்ட அதிபர்கள் கூறுகின்றனர்.

நாங்கள் சட்ட விரோதமாக எதனையும் செய்யவில்லை. பரீட்சை சட்ட திட்டங்களுக்குஅமைய, பரீட்சைக்கு முன்னதாக எமது ஹிஜாபை விலக்கி காதுகள் தெரியும் வண்ணம்  மேற்பார்வை அதிகாரிகள் பரீட்சித்த பின்னரேயே அவர்களது அனுமதியின் பின்னர்  பரீட்சை எழுதினோம். அப்ப‌டி இருக்கையில் பெறுபேறுகளை நிறுத்தியுள்ளமை அநீதியானது என அவர்கள் கூறுகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சரை, பாராளுமன்ற‌ உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஊடாக சந்ததித்து பேசியதாகவும், அவரும் பரீட்சைகள் திணைக்கள ஆணைய‌ளருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியதாகவும் அதிபர்கள் கூறுகின்றனர்.  ஆனாலும் எமது பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படாது தொடர்ந்து இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். UTV

UTV WhatsAPP குழுவில் இணைய: https://chat.whatsapp.com/I5AwxnciKp8Kd31yvn7Nnl

Related posts

உயிரிழந்த குடும்பத்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு

அஜித் பிரசன்ன உட்பட இருவர் மீண்டும் விளக்கமறியலில்

ரணில் ஜனாதிபதி மாளிகைக்கு