உள்நாடு

காத்தான்குடியில் மெளலவி ஒருவரின் மனைவி மீது துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியானது

வீடொன்றில் மகனுடன் வசித்து வந்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தானகுடி மீன்பிடி இலாஹா வீதி அஹமட் லேனில்   நேற்று (14)  முற்பகல்  இடம்பெற்றுள்ளது.

இதன் போது குறித்த துப்பாக்கி சூட்டில்  வீட்டில் வசித்த இளம் பெண்  காயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டுக்கு துப்பாக்கியுடன் வந்த   நபர்  பெண்ணை துப்பாக்கியினால் தாக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு  தப்பிச் சென்றிருந்தார்.

இச்சம்பவத்தில் சித்தீக் சிபானியா (32)  என்பவரே காயமடைந்துள்ளதுடன் இப்பெண்ணின் கணவர்  அவுஸ்ரேலியா நாட்டில் தற்போது  இருப்பதாகவும்   இவர் ஒரு மௌலவி எனவும், குறித்த பெண்ணுக்கு ஒரு மகன் இருப்பதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், காத்தான்குடி பொலிஸார் குறித்த பகுதியிலுள்ள சி.சி.ரி.வி‌ கெமராக்களையும் சோதனை செய்து, சந்தேக நபர் அடையாளம் கண்டு,  சந்தேக நபரை நேற்று மாலை ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்துள்ளனர்.

அத்துடன்  காயமடைந்த பெண்ணின்  வீட்டில்  தடவியல் பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் பெண்ணின் வீட்டிலிருந்து  துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன்  காயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக  மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அப்டேட்

காத்தான்குடி அஹமட் வீதி பகுதியில் வீடொன்றில் இருந்த பெண்ணை இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு மிரட்டி பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

சந்தேக நபர் துப்பாக்கியாலும் கைகளாலும் பெண்ணைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த 32 வயதுடைய பெண் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் பெண்ணின் பையிலிருந்த தங்க நகைகளையும் 20 இலட்சம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, ஆரியம்பதி கிழக்கைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related posts

சீனாவிற்கிடையிலான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடக் கோரிக்கை

சுகாதாரப் ஊழியர்களுக்கு இன்று முதல் 74 நிரப்பு நிலையங்கள் மூலம் எரிபொருள்