உள்நாடு

சீரற்ற காலநிலை : அதிகரித்துவரும் மரணங்கள் : அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இரத்தினபுரி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அதிகளவான மரணங்களும் பதிவாகியுள்ளன.

முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் 9 மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில் திங்கட்கிழமை (3) காலை 6 மணி வரை அந்த எண்ணிக்கை 16ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 3 தினங்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் 5 மரணங்களும், கொழும்பில் 3 மரணங்களும், மாத்தறையில் 6 மரணங்களும், காலியில் இரு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் மே மாதம் 15ஆம் திகதி முதல் கடந்த முதலாம் திகதி வரையான இரண்டு வாரங்களில் மாத்திரம் மரம் முறிந்து விழுந்தமையால் காலி, இரத்தினபுரி, புத்தளம், நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

காலி, இமதுவ பிரதேசத்தில் மே 21ஆம் திகதி 40 வயதுடைய ஒருவரும், இரத்தினபுரி – பலாங்கொடையில் 22ஆம் திகதி 40 வயதுடைய ஒருவரும், 28ஆம் திகதி கொடகவெல பிரதேசத்தில் 50 வயதுடைய ஒருவரும் மரம் முறிந்து விழுந்து உயிரிழந்துள்ளனர்.

இதேபோன்று புத்தளத்தில் மே 22ஆம் திகதி மாதம்பே பிரதேசத்தில் 39 வயதுடைய பெண்ணொருவரும், நாத்தாண்டியா பிரதேசத்தில் 36 வயதுடைய பெண்ணொருவரும், 23ஆம் திகதி ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் 22 வயதுடைய பெண்ணொருவரும் மரம் முறிந்து விழுந்து உயிரிழந்துள்ளனர்.

நுவரெலியாவில் மே 23ஆம் திகதி வலப்பன பிரதேசத்தில் 38 வயதுடைய ஆணொருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளார். பதுளையில் மே 25ஆம் திகதி அப்புதளையை சேர்ந்த 65 வயதுடைய பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளார். அதற்கமைய இயற்கை அனர்த்தங்களால் கடந்த இரு வாரங்களில் 16 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொலிஸார் மீது டிப்பர் வண்டி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

ஹிருணிகாவை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மத்திய கிழக்கு, சீன மற்றும் இந்திய இராஜதந்திரிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்