உலகம்உள்நாடு

ISயில் பயிற்சிபெற்ற நான்கு இலங்கையர்கள்! நீர்கொழும்பு மற்றும் கொழும்பு நபர்கள் என அடையாளம்

இந்தியாவின் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள், தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு கூட தயாராக இருந்ததாக குஜராத் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து அகமதாபாத் நகருக்கு வந்த இலங்கையை சேர்ந்த நான்கு பேர் அகமதாபாத் சர்தார் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

இவர்களை குஜராத் தீவிரவாத தடுப்புப் படையினர் கைது செய்து நேற்று மதியம் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்நிறுத்தியதுடன், இதில் பல தகவல்கள் வெளியாகின.

இதன்படி, கைது செய்யப்பட்ட  33 வயதான மொஹமட் நுஸ்ரத் என்ற நபர் நீர்கொழும்பைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பை சேர்ந்த 27 வயதான மொஹமட் நஃப்ரான், 43 வயதான மொஹமட் ரஷ்டீன் மற்றும் 35 வயதான மொஹமட் ஃபரிஷ் ஆகியோர் கைது செய்யப்பட்ட ஏனைய பயங்கரவாதிகளாவர்.

இவர்கள் இந் நாட்டிலிருந்து சென்னை வழியாக அகமதாபாத் நகருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 தமிழ் மொழியை மட்டுமே பயன்படுத்தும் நான்கு பயங்கரவாதிகளும் மொழி பெயர்ப்பாளர் மூலம் விசாரிக்கப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து கைப்பேசி, இரு நாட்டு நாணயத்தாள்கள் மற்றும் விமானச் சீட்டுக்களும் ஒருவரின் பயணப் பொதியில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து செயற்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரான அபுவை கடந்த பெப்ரவரி மாதம் சமூக ஊடகங்கள் மூலம்  இந்தக் குழு அடையாளம் கண்டுள்ளதாகவும், பின்னர் இவர்கள் கடும்போக்கு ISIS சித்தாந்தவாதிகளாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அபுவின் ஆலோசனையின் பேரில் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இலங்கை பணத்தில் 4 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் தற்கொலைப்படை தாக்குதலுக்கு கூட தயாராகி இருந்ததாக தகவல் வௌியாகியுள்ளது.

இவர்களது கைப்பேசிகளை ஆய்வு செய்ததில், அகமதாபாத் நகருக்கு அருகில் உள்ள நானாசிடோலா பகுதியில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பான தகவல்கள் அந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கு அம்பலமாகியுள்ளது.

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 03 கைத்துப்பாக்கிகளும் அதற்கு பயன்படுத்தப்பட்ட 20 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சேகரிக்கப்பட்ட வாய்மொழி மற்றும் விசாரணை ஆதாரங்களின் அடிப்படையில், நாட்டின் தண்டனைச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

(இந்தியா இலங்கை பிரதான ஊடகங்கள்)

Related posts

நாட்டில் தொலைபேசி கடத்தல் தீவிரமடைந்துள்ளது

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியைக் கொண்டு இலங்கையின் நீர் வழங்கலில் புதிய திருப்பம் என்கிறார் ஜீவன்

நெடுந்தூர பயண பேரூந்து சேவைகள் அனைத்தும் இரத்து