உள்நாடு

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளது

தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், தேர்தலுக்கான திகதி எதிர்வரும் ஒகஸ்ட் மாத ஆரம்பத்தியில் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பு மற்றும் ஜனாதிபதி தேர்தல் சட்டம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி தேர்தல் திகதி தெரிவு செய்யப்படும் என ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான முன்னாயத்த நடவடிக்கையாக தேர்தல் பதிவேடுகள் தயாரித்தல் உள்ளிட்ட விடயங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், எதிர்வரும் தேர்தலுக்கு தங்களைத் தயார்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் பணிகளை மேற்கொள்ள விருப்பும் அரசு ஊழியர்களின் பட்டியல் ஏற்கனவே தயார்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து தேவையான பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடாத்தப்படவுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முயற்சித்த போதிலும் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாகாணங்களுக்கு இடையே வரையறுக்கப்பட்ட போக்குவரத்து

மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிக்கை

யாழ். வைத்தியசாலையின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு