உள்நாடு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், நிருவாக உத்தியோகத்தர்கள் சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக் குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில், தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீனின் தலைமையில் இன்று (19.03.2024) ஆம் திகதி பல்கலைக்கழக முற்றலில் வேலைநிறுத்தத்துடன் கூடிய பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக ஊழியர்களில் குறிப்பிட்ட தரப்பினர் இடையிடையே வேலைநிறுத்தத்தில் குதிப்பதால் மாணவர்களின் கல்விநிலை உட்பட பல்வேறு செயற்பாடுகள் மந்தகேதியிலேயே இடம்பெறுகின்றன.
பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின்  செயலாளர் எம்.எம். முகமது காமிலின் வழிகாட்டலில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில்
நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியால் சடுதியாக அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவினை ஈடுசெய்ய முடியாத நிலையில், நீண்டகால சம்பள முரண்பாடுகளை சீர்செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்ந்தும் உதாசீனம் செய்யப்படுவதை வெளிக்கொணருமுகமாகவும் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலுமுள்ள கல்விசாரா ஊழியர்கள் இவ்வாறான  முழுநாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்வதாக இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
எங்களது போராட்டம் வாழ்வாதாரத்துக்கான போராட்டம் என்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலவரங்களின் காரணமாக எங்களது ஊழியர்கள் தங்களது வாழ்வை கொண்டுசெல்ல மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என்றும்  ஒரே நிறுவனத்தின் பணியாற்றும் ஒரு தரப்பினருக்கு சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு, எங்களுக்கு வாக்குறுதி தந்து அரசு ஏமாற்றி வருகின்றது என்றும்  எங்களது சம்பள விடயத்தில் அரசு பாகுபாடாக நடந்துள்ளது  அப்பட்டமான உண்மை என்றும்  இவ்வாறான நிலை நீடிக்குமாக இருந்தால் நாங்கள் தொடர் போராட்டம் ஒன்றுக்கு செல்வதைத்தவிர வேறு வழியில்லை என்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தெரிவித்தார்.
இன்றும்  இடம்பெற்ற இப்போராட்டத்தில்  வாக்களிக்கப்பட்ட 107% சம்பள அதிகரிப்பை வழங்கு, உறுதியளித்த 25% MCA கொடுப்பனவை வழங்கு என்பனபோன்ற பல்வேறு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வை தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இங்கு; ஒற்றுமையே பலம், சமத்துவமே எம் தேவை, அரசாங்கமே கண்முளித்துப்பார், 8 வருட ஏமாற்றம் இன்னும் தொடருமா?, வேண்டாம் வேண்டாம் பாகுபாடு வேண்டாம், புத்திஜீவிகளை உருவாக்கும் அரச ஊழியர்களாகிய நாங்கள் நடுத்தெருவில் என்பனபோன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பல்கலைக்கழக சொத்துக்களை பாதுகாக்கும்பொருட்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் கடமைகளை மட்டுப்படுத்தப்பட்ட அவசியமான அல்லது அவசியம் என கருதும் இடங்களில் மாத்திரம் தங்களது சேவையை வழங்கியுள்ளதாகவும், குறித்த கடமையின் நிமித்தம் சீருடைகளை அணியாது சாதாரண உடையில் (Casual dress) அவர்கள் பணியாற்றுவதாகவும் ஏனைய அனைத்து விதமான சேவை வழங்கும் உத்தியோகத்தர்களும் தங்களது கடமைகளில் இருந்து விலகியுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
(எஸ்.அஷ்ரப்கான்)

Related posts

பொதுத் தேர்தல் பிரச்சாரம் குறித்து விசேட அறிவிப்பு

பொது சுகாதார பரிசோதகர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில்

குண்டுவெடிப்பு தொடர்பான புலனாய்வுக் கடிதம் தொடர்பில் அநுர அம்பலம்