உள்நாடு

காசாவிற்கு உதவிகள் தயார் பாதுகாப்பாக எடுத்துச் செல்வதில் சிக்கல் – சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்.

(UTV | கொழும்பு) –

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நிலையில், காசா பகுதியில் சிக்கியுள்ளவர்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
அங்கு உதவிகளும் மீட்பு பணியாளர்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எகிப்தை அண்மித்துள்ள ரஃபா கடவை மூலம் உதவிப் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் செல்வதற்கான இணக்கத்தை எகிப்திடமிருந்து பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தனது டெல் அவிவ் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் போது விமானத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே பைடன் இதைக் கூறியுள்ளார். ஆனால், அந்த உதவி வாகனத் தொடரணி அந்த எல்லைக்கடவையின் எகிப்திய பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எகிப்திய ஜனாதிபதி அப்தல் ஃபதா அல் சிசி உதவி வாகனங்கள் செல்லும் வகையில் அந்த கடவையை திறக்க சம்மதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ள நிலையில், காசாப் பகுதியை இலக்கு வைத்து இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்துவதால் அந்தப் பகுதிக்குள் செல்ல முடியவில்லை என எகிப்தின் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளர். அவ்வகையில் உதவிகள் காசாப் பகுதிக்குள் செல்ல முடியாத நிலை காரணமாக காயமடைந்துள்ள ஆயிரக்கணக்கானவர்களுக்கு உதவிகள் கிடைக்காமல் போகும் பேராபத்து நிலவுவதாக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன நிலப்பரப்பில் இடம்பெறும் வன்முறைகள் பல ஆண்டுகளில் தாங்கள் கண்டிறாத ஒன்று என, அந்த சங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

காசாவிலுள்ள பொதுமக்களின் தேவைக்காக, அவசர வைத்திய உதவிப் பொருட்கள் ஐ சி ஆர் சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு அவை 60 வாகனங்களில் தயாராக இருந்தாலும், அவற்றை அவசரமாகத் தேவைப்படுபவர்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்ல முடியவில்லை என அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
வைத்திய உதவிப் பொருட்களுக்கு அப்பாற்பட்டு, நான்கு சத்திரசிகிச்சை வைத்தியர்களும் தயார் நிலையில் இருப்பதாக ஐ சி ஆர் சி கூறுகிறது. அதில் தலைமை சத்திரசிகிச்சை வைத்தியர், எலும்பியல் வைத்தியர், மயக்கவியல் வைத்தியர ஆகியோருடன் செவிலியர் ஒருவரும் மிகவும் நெருக்கடியான நிலையிலுள்ள காசாப் பகுதி வைத்தியசாலைக்கு உதவ தயார் நிலையில் உள்ளனர். அங்கு நாளாந்தம் வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், மருந்துகள், உதவிப் பணியாளர்கள் மற்று வைத்தியர்கள் உள்ளே செல்வதற்கான பாதுகாப்பான வழி இன்னும் திறக்கபப்டவில்லை.

அங்கு நிலைமை மிகவும் நெருக்கடியாகவும் அதேவேளை ஆட்களை அனுப்புவது மிகவும் சவால் நிறைந்ததாகவும் காணப்படுவதாக, ஐ சி ஆர் சியின் தலைமை வைத்தியர் டொம் பொடோக்கர் தெரிவித்துள்ளார். அத்துடன் “அங்கு ஆட்களை அனுப்பு உதவுவது மிகவும் முக்கியமானது. அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அங்கு ஏராளமனவர்கள் காயமடைந்துள்ளனர், ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அப்படி துன்புறுபவர்களுக்கு உதவ வேண்டிய ஒரு கடமை ஐ சி ஆர் சிக்கு உள்ளது. இம்முறை அங்கு சூழல் மிகவும் கடினமாக உள்ளது. காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அங்கு அரங்கேறும் மனிதாபிமான அவலம் என்பது மிகப்பெரும் அளவிலானது” என குறிப்பிட்டுள்ளார். இரண்டு வாரமாக நடைபெற்றுவரும் இந்த கொடூரமான மோதல்களில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கனவர்கள் உயிரிழந்துள்ளனர். அது மாத்திரமின்றி இஸ்ரேலை ஆளும் பெஞ்சமின் நெத்தன்யாஹூ அரசாங்கம் காசா நிலப்பரப்பு மீது பொருளாதரத் தடைகளையும் விதித்துள்ளது.

இந்த மோதலில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தோ, காணாமலோ அல்லது இடம்பெயர்ந்தோ உள்ளனர். இந்த மோதல் கட்டுக்கடங்காமல் போகக்கூடும் எனவும் இரு தரப்பிலும் பொதுமக்களின் துன்பங்களும் துயரங்களும் மேலும் அதிகரிக்கலாம் எனவும் ஐ சி ஆர் சி எதிர்வு கூறியுள்ளது. காசாவில் வைத்தியசாலைகள் செயலிழந்து போகும் நிலையில் உள்ளன. அங்கு மின் விநியோகம் இல்லை, மக்களுக்கு சிறிதளவே உணவும் குடிநீரும் உள்ளது. நடைபெற்றும் வரும் மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள மனிதாபிமான அவலத்தை எதிர்த்து சமாளிக்க தொடர்ச்சியாக நிலைத்திருக்கக் கூடிய மனிதநேய உதவிகள் தேவை என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொவிட் நிலைமைக்கு அமைவாக எதிர்கால தீர்மானங்கள்

கொழும்பை அபிவிருத்தி செய்ய திட்டம்

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி