உள்நாடு

இந்தியாவில் இருந்து புதிய நிதி வசதிகள் இனியும் இல்லை

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்பக் கடன் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பொருளாதாரம் ஸ்திரமாகத் தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு நீட்டிக்கப்பட்ட கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலர் வசதியைத் தாண்டி இலங்கைக்கு புதிய நிதி உதவியை வழங்க இந்தியா திட்டமிடவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு ஆதாரங்களை மேற்கோள் காட்டி, ராய்ட்டர்ஸ் இதைத் தெரிவிக்கிறது. வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கைக்கு இந்த ஆண்டு அதிக உதவிகளை வழங்கிய நாடாக இந்தியா மாறியுள்ளது.

இந்தியாவின் முடிவு ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும், மேலும் பெரிய அளவிலான ஆதரவு கிடைக்கப் போவதில்லை என்று பல மாதங்களுக்கு முன்பே புதுடெல்லி அவர்களுக்கு ஒரு “சிக்னல்” கொடுத்ததாகவும் இலங்கை அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஜப்பான், சீனா மற்றும் தென் கொரியாவுடன் இந்த ஆண்டின் இறுதியில் இலங்கை நடத்த திட்டமிட்டுள்ள நன்கொடையாளர்களின் உச்சிமாநாட்டிற்கு இந்தியா அழைக்கப்படும் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

1 பில்லியன் டாலர் பரிமாற்ற ஒப்பந்தம் மற்றும் மே மாதம் செய்யப்பட்ட எரிபொருள் கொள்வனவுகளுக்கு இரண்டாவது 500 மில்லியன் டாலர் கடன் வழங்குவதற்கான கோரிக்கையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சிறிதளவு முன்னேற்றம் கண்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் மற்றொரு ஆதாரம் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பாக தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்

அரசின் பங்காளிக் கட்சிகள், பிரதமரை சந்தித்தனர்