உள்நாடு

அரச பணியாளர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்

(UTV | கொழும்பு) –  வேலை செய்ய முடியாத அனைவரையும் அரச சேவையை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம்கோல்டன் மெங்கோ விழா மண்டபத்தில் இன்று (21) நடைபெற்ற அனுராதபுரம் மாவட்ட அபிவிருத்தி சபையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டுக்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு தாம் யாரையும் கூறவில்லை எனவும், நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் தாமதமின்றி இணைந்துகொள்ளுமாறு அனைவரையும் அழைப்பதாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டுள்ளார்.

மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்கும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் அழைக்கப்பட்ட இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரிவினை காலம் தற்போது முடிவடைந்துள்ளதால், நாட்டுக்கான தீர்மானங்களை அனைவரும் தாமதமின்றி எடுக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நாட்டுக்கு புதிய அரசியல் கோட்பாடு மற்றும் கலாச்சார அரசியல் பயணம் தேவை என தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, பழைய அரசியல் அமைப்பு மக்களால் நிராகரிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அபிவிருத்தி செய்வதற்கும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அடிமட்ட அரச உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி, எவருக்கும் இலவசமாக உணவு வழங்க அரசாங்கம் தயாரில்லை எனவும் அனைவருக்கும் அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க அநுராதபுரம் புடபீமாவை பிரதான சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் குழுவொன்று நியமிக்கப்படும் எனவும், அந்த விடயங்களில் வெளிநாட்டு ஆலோசனை சேவைகளையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

“நாங்கள் குறிப்பாக எங்கள் விவசாயத்துடன் தொடங்குவோம். இந்தப் பணியைச் செய்யும்போது உங்கள் அனைவருக்கும் குறிப்பாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ஒரு வேலைத்திட்டம் உள்ளது. என்ன நடக்கிறது, குறைபாடுகள் என்ன என்பதை உங்கள் எம்.பி.க்களிடம் சொல்லுங்கள். அவர்கள் வந்து பாராளுமன்றத்திற்கு தெரிவிப்பார்கள். அந்த திட்டத்தை நாம் இணைந்து செய்யலாம். உங்களால் மற்ற பயிர்களை வளர்க்க முடிந்தால், உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் அதைச் செய்யுங்கள். கிராம அளவில் 9 அதிகாரிகள் இருப்பதாக நினைக்கிறேன். அவற்றை பயிரிட்டால் போதும். எனக்கு வேறு எதுவும் தேவையில்லை. தங்களின் கிராம அலுவலர் பிரிவை பிரித்து அனைவருக்கும் ஒரு பகுதி சாகுபடி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் வேலை செய்ய விரும்பினால், வேலை செய்யுங்கள். இல்லாவிட்டால் வீட்டுக்குப் செல்லலாம். நாங்கள் பணம் கொடுக்க தயாராக இல்லை. மாவட்டச் செயலாளர் பிரதேச செயலாளர்களுடன் பார்த்துக்கொள்ள வேண்டும். சும்மா யாரும் சாப்பிட முடியாது. ஏதாவது செய்ய வேண்டும். ஏனென்றால் நாங்கள் செலுத்துகிறோம். என்னாலயும் சாப்பிட முடியாது. ஏதாவது செய்ய வேண்டும். நான் இதை மேம்படுத்தவில்லை என்றால் நானும் செல்ல வேண்டும். முதலில் கிராமத்தில் இருந்து தொடங்குவோம்..”

Related posts

பைசர் தடுப்பூசியின் மேலும் ஒரு தொகை இலங்கை வந்தடைந்தது

சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு

இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இராஜினாமா