உள்நாடு

மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் உற்பத்திக்காக சபுகஸ்கந்த மீண்டும் வழமைக்கு

(UTV | கொழும்பு) –  சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் இன்று (30) முதல் நாளாந்தம் 600 முதல் 800 மெற்றிக் தொன் மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருளை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள 79,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் தாங்கி நாளாந்தம் எரிபொருளை இறக்கி வருவதால் சுத்திகரிப்பு நிலையம் எரிபொருள் உற்பத்தியை ஆரம்பித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அடுத்த டீசல் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து டீசல் உற்பத்தி செய்ய முடியும் என நம்புவதாக அமைச்சில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

கடந்த 25ஆம் திகதி இலங்கைக்கு வந்த கச்சா எண்ணெய் கப்பலுக்கு பணம் செலுத்துவதற்கு சுமார் 33 நாட்கள் கடந்துள்ளன. இதன்படி, இந்தக் கப்பலுக்கு நாளாந்தம் 120,000 அமெரிக்க டொலர்கள் தாமதமாகச் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விமான எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக இலங்கை வந்துள்ள பல சர்வதேச விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, சுத்திகரிப்பு நிலையம் துவங்கினால், பிரச்சினைக்கு தீர்வு காணப்படும், எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் கடந்த மார்ச் 21ஆம் திகதி மூடப்பட்டது.

இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் தொடங்கப்படுவதால், மின் உற்பத்திக்கான மண்ணெண்ணெய் மற்றும் நாப்தாவைப் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

  • ஆர்.ரிஷ்மா

Related posts

மின்துண்டிப்பு குறித்த அட்டவணை

கொழும்பில் உடல் வெப்பநிலையை சரிபார்க்க இராணுவ வீரர்கள் களத்தில் [VIDEO]

லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் 10 மாத குழந்தை உட்பட இருவருக்கு கொரோனா