உள்நாடு

அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி என்ற வகையில் மக்கள் சார்பாக தாம் அழைப்பு விடுக்கிறேன்

(UTV | கொழும்பு) –  சகல சவால்களையும் எதிர்கொண்டு விடாமுயற்சியுடன் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த தொழிலாளர் வர்த்தகத்தினர் உறுதிப்பூண்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்றைய மே தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகவாழ் உழைக்கும் சமூகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில், இந்த வருட சர்வதேச தொழிலாளர் தினம் நினைவுகூறப்படுகின்றது.

நாட்டில் கடந்த மூன்று வருடங்கள் பாரிய சவாலுக்கு உள்ளாகியது தொழிலாளர் வர்க்கமே ஆகும். நாளுக்கு நாள் தொழிலாளர்கள் மீதான அழுத்தங்கள் அதிகமாக உள்ளன.

அதிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கும், நிலவுகின்ற சிக்கலான நிலைமையினைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் என்ற வகையில் பல்வேறு அணுகுமுறைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அந்நியச் செலாவணி இழப்பானது பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது.

அவை அனைத்தையும் முகாமைத்துவம் செய்வதுதான் தற்போதைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழியாகும்.

ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமை யாரால் ஏற்படுத்தப்பட்டது என்பதைப் பின்தொடர்வதற்குப் பதிலாக, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதில் கவனம் செலுத்துவதே தற்போது மேற்கொள்ள வேண்டிய விடயமாகும்.

அதற்காக மிகவும் பொருத்தமான மற்றும் செயற் திறன்மிக்க வேலைத்திட்டத்திற்குச் சென்று மக்களின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும்.

இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக பொறுப்புடன் ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி என்ற வகையில் மக்கள் சார்பாக தாம் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்காகவும் இரவு பகல் பாராது சேவையாற்றும் உழைக்கும் மக்களுக்கு பிரதமர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொவிட்-19 பரவல் நிலைக்கு மத்தியில் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்ட மக்கள், நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார நெருக்கடியினாலும் பாதிக்கப்பட்டுள்ளமையானது இரகசியமான விடயமில்லை.

எதிர்பாராத விதமாக முகங்கொடுக்க நேரிட்டுள்ள இந்த பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியிலும், மிகுந்த அர்ப்பணிப்புடனும், நிதானத்துடனும் செயல்பட்டு வரும் தொழிலாளர்கள் நாட்டுக்கு சிறந்த முன்மாதிரியாக திகழ்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றாக கைக்கோர்த்து, சவாலை வெற்றி கொள்ள வேண்டும்.

பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கு இதுவரை முன்னெடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்திருப்பதுடன், தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அதற்கான ஆதரவை பெற்று வருகிறது.

இந்த அனைத்து முயற்சிகளினதும் இறுதி நோக்கம் ஒரு சிறந்த நாட்டை நிர்மாணிப்பதாகும். அதற்காக உழைக்கும் மக்களின் மகத்தான அர்ப்பணிப்பை சர்வதேச தொழிலாளர் தினமான இன்றைய தினத்தில் மரியாதையுடன் நினைவு கூருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய அரசாங்கம் இலங்கை வரலாற்றில் முதல் தடவையான நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, மே தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இயலாமை, அசமந்த போக்கு மற்றும் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் காரணமாக நாடு இதற்கு முன்னர் எதிர்நோக்காத சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் இந்த முறை மே தினத்தை ‘கறுப்பு மே தினமாக’ கொண்டாடும் நிலைமை உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

மேலும் 200 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி

சுகாதாரத்துறைசார் தொழிற்சங்கங்கள் சில பணிப்புறக்கணிப்பு

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துக [VIDEO]