உள்நாடு

மதுபான உற்பத்திகளும் தடைப்படும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற காரணங்களால் மது தயாரிக்க போதிய எத்தனோல் கிடைப்பதில்லை என உற்பத்தி நிறுவனங்கள் கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளன.

செவனகல, பெல்வத்த மற்றும் கல்ஓயா சீனி தொழிற்சாலைகள் கரும்புகளை பயன்படுத்தி உள்நாட்டில் எத்தனோல் உற்பத்தி செய்கின்றன. மற்றொரு நிறுவனம் சோளத்தைப் பயன்படுத்தி எத்தனோல் தயாரிக்கிறது. இருப்பினும், 2020 ஜனவரி முதல் எத்தனோல் இறக்குமதியை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது.

நாளாந்தம் 24,000 லீற்றர் எத்தனோல் உற்பத்தி செய்யப்படுவதாக கல்ஓயா சீனி தொழிற்சாலையின் பொது முகாமையாளர் வருண மதுஷன் தெரிவித்தார். பெல்வத்த சீனி தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 20,000 லீற்றரும் செவனகல தொழிற்சாலை 18,000 லீற்றரும் உற்பத்தி செய்கின்றன. எவ்வாறாயினும், இலங்கையின் முன்னணி மது நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கு நாளொன்றுக்கு 80,000 லீற்றருக்கு மேல் தேவைப்படுவதாக கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

டீசல் தட்டுப்பாடு மற்றும் மின் உற்பத்தி இயந்திரங்களை வாடகைக்கு விடுவதால் ஏற்பட்டுள்ள மின்சார தட்டுப்பாடு காரணமாக கல்ஓயா சீனி தொழிற்சாலைக்கு மேலதிக செலவுகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், திட்டமிட்டபடி எத்தனோல் கிடைக்காவிட்டால், மார்ச் 22 முதல் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும் என, நாட்டின் முன்னணி மதுபான ஆலை கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

Related posts

மக்கள் அலட்சியமாக இருந்தால் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நடைமுறையாகும்

#கோட்டாகோகம தாக்குதல் : முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் மொரட்டுவை மாநகர சபை ஊழியரும் கைது

“கூட்டு ஒப்பந்த விவகாரத்தில் எவ்வித சட்டசிக்கலும் இல்லை” கம்பனிகளை எச்சரிக்கும் ஜீவன்