உள்நாடு

உத்தேச நிதி யோசனை தொடர்பான வாதங்கள் முடிவுக்கு

(UTV | கொழும்பு) –    உத்தேச நிதி யோசனைக்கு ஆதரவாகவும், எதிராகவும் முன்வைக்கப்பட்ட வாதங்களை உயர் நீதிமன்றம் இன்று முடிவுக்கு கொண்டுவந்தது.

அத்துடன், சிறப்புத் தீர்மான மனுக்கள் தொடர்பில், அனைத்துத் தரப்பினரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதிக்கு முன் தமது எழுத்துப்பூர்வமாக சமர்ப்பணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதன் பின்னர், முன்மொழியப்பட்ட யோசனை மீதான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு தெரிவிக்கப்படவுள்ளது.

இதற்கிடையில், நாடாளுமன்றத்தின் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களின் பட்டியலை சட்டமா அதிபர், நீதிமன்றத்தில் முன்வைத்தார்.

சட்டமா அதிபருக்காக முன்னிலையான மூத்த அரச சட்டத்தரணி நிர்மலன் விக்னேஸ்வரன், யோசனையின் 4, 5, 6, 12, 13, 14 மற்றும் 17 ஆகிய பிரிவுகளில் சில திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

தனது சமர்ப்பிப்புகளில், வரி மன்னிப்பு வழங்குவது மக்களை வரி வலையில் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டார், மேலும் பணச் சலவைக்கு இந்த யோசனை சிறிதும் உதவாது என்று மீண்டும் வலியுறுத்தினார்.

2021, ஜூலை 29 ம் திகதி நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிதி யோசனைக்கு எதிராக எட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஜேவிபியின் சுனில் ஹந்துன்நெத்தி உப்பட்டவர்கள் இதில் அடங்குகின்றனர்.

யோசனையின் 3,4,5 மற்றும் 6 உட்பிரிவுகள் வரி செலுத்துவோர் மீது சமம் அற்ற முறையை ஏற்படுத்தும். அத்துடன் எந்தவொரு வரி, அபராதம் அல்லது வட்டி செலுத்த அல்லது சட்டத்தின் விதிகளின் கீழ் எந்தவொரு விசாரணை அல்லது வழக்குத் தொடரும் பொறுப்பிலிருந்து முழுமையாக விலக்களிப்பதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யோசனையின் 7 வது பிரிவு குடிமக்கள் தகவல் உரிமையை மீறுவதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பணமோசடி எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு அல்லது பயங்கரவாத நிதியுதவி தொடர்பான இலங்கையின் பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு கடமைகள்.இத்தகைய விதிகள் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் என்பன இதன்மூலம் ஏற்படலாம் என மனுதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனவே இந்த யோசனையை நாடாளுமன்றில் நிறைவேற்றும் போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பும் கோரப்பட வேண்டும் என உத்தரவிடக்கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள இன்றும் நீண்ட வரிசை.

editor

மேலும் 750 பேர் நாடு திரும்பினர்

20ஆம் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைப்பு