உலகம்

நாம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம் – ட்ரம்ப்

(UTV – கொழும்பு) – நாம் இப்போது கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம். அடுத்த 4 வாரங்களுக்குதான் நாம் சில தியாகங்களைச் செய்யப் போகிறோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“அமெரிக்காவில் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அதற்கு மக்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்.

நாம் இப்போது கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம். அடுத்த 30 நாட்களுக்கு ஒவ்வொரு அமெரிக்கரும் அரசு வழிகாட்டலின்படி விதிமுறைகளைக் கடைபிடித்து கொரோனா தொற்றைக் குறைக்க வேண்டும்.

அடுத்த 4 வாரங்களுக்குதான் நாம் சில தியாகங்களைச் செய்யப் போகிறோம், இதன் மூலம் லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்

நாம் சமூக விலக்கலைக் கடைபிடித்து, அதீதிமான சுத்தத்தை கடைபிடித்து, வீட்டுக்குள்ளே இருப்புதான் கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாம் வெல்ல முக்கியமான ஆயுதம், அந்த பெரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்க முடியும். நாம் அடுத்துவரும் வாரங்களில் லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் உயிரைக் காப்பாற்றப் போகிறோம் என்ற சிந்தனையில் இருங்கள்.

மருத்துவ ரீதியாக நாம் நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருகிறோம். உலகில் எந்த நாடும் செய்யாத அளவுக்கு அதிகமான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து வருகிறோம்.

கொரோனா வைரஸுக்கு எதிராக மருந்து கண்டுபிடித்து அதை பரிசோதிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதித்துள்ளது.

மக்களை கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்ற அமெரிக்கா எடுத்து வரும் முக்கியமான முயற்சிகளில் இது மைல்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சருக்கு கொரோனா

ராகுல்காந்தியின் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது!

மலேசியாவின் மஹதீர் முகமது தேர்தலுக்குத் தயாராகிறார்