சூடான செய்திகள் 1

மாத்தறை சம்பவம்-மூன்றாவது சந்தேக நபரும் கைது

(UTV|COLOMBO)-மாத்தறை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

மாத்தறை பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளினால்  குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை, வல்கம பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சுனுரு விமுக்தி ஜயவீர எனும் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளான்.

மாத்தறை, எலவில்ல பிரதேசத்தில் கடந்த 24 ஆம் திகதி மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

குறித்த மாணவன் மாலைநேர வகுப்பு ஒன்றுக்கு அருகில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தான்.

மாத்தறை புனித தோமஸ் வித்தியாலயத்தில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்ற ரவிது கிம்ஹான் என்ற 19 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளான்.

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சிதிஜ சௌந்தர்ய எனும் இளைஞன் நேற்று (26) மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகியதை அடுத்து, டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டான்.

அத்துடன் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரான துஷான் நிம்நஜித் என்ற இளைஞன், நேற்று மாத்தறை பொலிஸாரிடம் சரணடைந்திருந்தான்.

இந்நிலையிலேயே மூன்றாவது சந்தேக நபரான சுனுரு விமுக்தி ஜயவீர என்ற இளைஞன் இன்று கைது செய்யப்பட்டுள்ளான்.

குறித்த இளைஞனை இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

கஞ்சிப்பான இம்ரானின் தந்தை உள்ளிட்ட 6 பேர் விளக்கமறியல்

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு விளக்கமறியல்

முன்னாள் இராணுவ அதிகாரிக்கு ஏப்ரல் 9 ஆம் திகதி வரை விளக்கமறியல்