நுவரெலியாவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக பிற்பகல் வேளைகளில் கன மழை பெய்து வருகிறது.
இன்றும் (28) பெய்த பலத்த மழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக நுவரெலியாவில் அதிகமான தாழ்நிலப் பகுதிகள் முற்றாக மூழ்கியுள்ளன.
சில பிரதான வீதிகளில் மழை நீர் நிரம்பியுள்ளதுடன், நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் சிபெட்கோ எரிபொருள் நிலையத்துக்கு முன்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அவ்வீதியில் சில மணித்தியாலங்களாக போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டது.
இதேவேளை நுவரெலியா – உடப்புசல்லாவ மற்றும் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதிகளிலும் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டது.
மேலும், நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெஸ்போட், கிளாரண்டன், கிரிமிட்டி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையினால் பிரதான வீதிகளையும் அதிக குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
குறிப்பாக, அதிக மழைவீழ்ச்சி காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நுவரெலியா – கந்தப்பளை பகுதிகளில் மரக்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மேலும், நுவரெலியா நகரில் வர்த்தக நிலையங்களில் வெள்ள நீர் புகுந்ததால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, தோட்டங்களை அண்டிய வீடுகளுக்கும் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் பாரிய மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.