போக்குவரத்து விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்பீட் கன் சாதனங்கள் இலங்கை பொலிஸிற்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
இரவில் மிகவும் திறம்பட பயன்படுத்தக்கூடிய இந்த சாதனம், 1.2 கிலோமீட்டர் தொலைவில் வரும் வாகனத்தைப் பிடிக்கும் திறன் கொண்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த முறை மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோவை நீதிமன்றத்தில் சாட்சியாக சமர்ப்பிக்கவும் முடியும்.
இதன் மூலம் வாகனத்தின் வேகம், சாரதியின் புகைப்படம் மற்றும் வாகனத்தின் இலக்கம் உள்ளிட்ட பல தகவல்களைப் பெற முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணவல, இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
“2020 முதல் 2024 வரை பார்த்தால், வீதி விபத்துக்கள் 11,617 நடந்துள்ளன. கடுமையான விபத்துக்கள் 33,259 ஆக உள்ளன. 12,322 பேர் இறந்துள்ளனர்.”
“2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ஆம் திகதி வரை 341 பேர் இறந்துள்ளனர். இவர்கள் ஆரோக்கியமான மனிதர்கள்.”
“இந்த வீதி விபத்துக்களை குறைப்பதற்காகவே இந்த ஸ்பீடு கன் கொண்டுவரப்பட்டது.”
“பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணமாக இருப்பது அதிக வேகம்.”
இந்த புதிய ஸ்பீடு கன் அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டது.
“தொழில்நுட்ப ரீதியாக மிக உயர்ந்த வேக அளவீட்டு கருவி இது.
இதை ‘டூ கேம்’ என்று சொல்கிறார்கள். இதில் நைட் விஷன் உள்ளது. 1.2 கிலோமீட்டர் தூரம் வரை இது செயல்படும்.”
“இந்த கருவியால் சாரதியின் புகைப்படம், வாகனத்தின் இலக்கம், வேகம் ஆகியவை பதிவாகின்றன. உடனடியாக அதை காட்ட முடியும். யாரும் மறுக்க முடியாது.”
“இந்த வீடியோவை சாட்சியமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும்.”
“இலங்கை முழுவதும் இது பயன்படுத்தப்படுகிறது. இதுவரை 30 கருவிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஒரு கருவியின் விலை 33 இலட்சம் ரூபாய். தற்போது 30 பிரிவுகளுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளன.
மேலும் 15 கருவிகளை கொண்டுவர ஓர்டர் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு 45 பிரிவுகளுக்கும் வழங்க முடியும்.”