‘உலகலாவிய விசேட முன்னேற்றங்கள்’ குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை (27) இந்தியா செல்லவுள்ளார்.
உலகலாவிய முக்கிய இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் நாளை வெள்ளிக்கிழமை புதுடில்லியில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதம விருந்தினராக பங்கேற்கவுள்ள இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீவன் ஹாபர், அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி எபொட் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன் போது தென்னாசியா தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்புரையாற்றவுள்ளார்.
அத்தோடு இவ்விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட சந்திப்பிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
அத்தோடு இந்தியாவிலுள்ள முக்கிய தொழிலதிபர்களுடனான சந்திப்பிலும் முன்னாள் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க குறுகிய காலத்துக்குள் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது முக்கிய விஜயம் இதுவாகும். எதிர்வரும் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவர் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.