திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளி ஒருவருக்கு 7 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டார்.
இவ்வாறு 7 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டவர் கிண்ணியா கட்டையாறு மதரஸா வீதியில் வசித்து வரும் ஜவ்பர் ரிஸ்வான் (38) எனவும் தெரிய வந்துள்ளது.
கிண்ணியா கட்டையாறு பகுதியில் மத்ரஸாவுக்கு செல்லும்போது சிறுவனை பலவந்தமாக இழுத்துச் சென்று பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிலையில், குறித்த வழக்கு கடந்த பத்து வருடங்களாக இடம்பெற்று வந்த நிலையில் திருகோணமலை மேல் நீதிமன்றில் இதன் தீர்ப்பு (02) திறந்த நீதிமன்றில் வாசிக்கப்பட்டது.
மத்ரஸாவுக்குச் சென்ற மாணவனை பலாத்காரமாக இழுத்துச் சென்று பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகக் கூறியே அவருக்கெதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபருக்கு 7 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் 1500 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அதனைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு மாத சாதாரண சிறை தண்டனை விதித்தும் நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் கட்டளையிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பத்தாயிரம் ரூபா நஷ்ட ஈடாக வழங்குமாறும் அதனை கட்டத் தவறினால் ஆறு மாத கால சிறை தண்டனை விதிப்பதாகவும் பாதிக்கப்பட்டோர் நிதியத்துக்கு தண்டனைப் பணத்திலிருந்து 20 சத வீதம் செலுத்த வேண்டும் எனவும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் அத்தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
-அபு அலா