மட்டக்களப்பு பாசிக்குடாவில் ஹோட்டல் என்ற பெயரில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் முற்றுகையிட்டு, பெண் முகாமையாளர் உட்பட மூன்று பெண்களை நேற்று (07) மாலை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக பாசிக்குடா பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி. லலித் லீலாரத்தினவின் ஆலோசனைப்படி, பொலிஸ் பரிசோதகர் ரி. மேனன் தலைமையிலான குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இதற்காக, அவர்கள் முதலில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்து, அனுமதி பெற்ற பின்னர், சம்பவ தினமான வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில் விடுதியை முற்றுகையிட்டனர்.
முற்றுகையின் போது, விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்கள் மற்றும் விடுதியை நிர்வகித்த பெண் முகாமையாளர் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
-சரவணன்