ஈதுல் பித்ர் பெருநாள் தினத்தில் பலஸ்தீன முஸ்லிம்களை முன்னிலைப்படுத்திப் பிரார்த்திப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள “ஈதுல் பித்ர் ” பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது பெருநாள் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் நோன்பு நோற்று,தொழுகைகளிலும் பிரார்த்தனைகளிலும் அதிகம் ஈடுபட்டு,ஏழைகளுக்கு ஈந்துதவி,நற்செயல்கள் புரிந்த புனித ரமழான் மாதத்தின் இறுதியில் “ஈதுல் பித்ர்’ பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
அதேவேளையில், மேற்கு ஆசியாவில், மத்திய கிழக்கில் காசா உட்பட பாலஸ்தீனத்திலும், லெபனான் மற்றும் சிரியா போன்ற நாடுகளிலும் நிலவும் யுத்த சூழ்நிலையிலும், கிழக்கு ஆசியாவில் மியான்மரிலும், தாய்லாந்து மற்றும் சீனாவின் சில பகுதிகளிலும் பாரிய நிலநடுக்கத்தின் கோர விளைவுகளுக்கு மத்தியிலும் நாங்கள் சந்தித்திருக்கும் இந்த ஈத் பெருநாளை துக்கத்துடன் அனுஷ்டிக்க நேர்த்திருக்கின்றது
இஸ்ரேலின் தொடர்ச்சியான இனப்படுகொலை தாக்குதல்களினால் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் உயிர்களை இழந்தும், எண்ணற்ற குழந்தைகளும்,விதவைகளும் அனாதைகளாகவும் ஊனமுற்றவர்களாகவும் ஆகியிருப்பதையிட்டு இந் நன்னாளிலும் நாங்கள் வருந்துகின்றோம்.
இரத்தக்களரி ஓய்ந்து , பாலஸ்தீன மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கப் பிரார்திப்பதோடு, அவர்களுடனான எங்கள் ஒருமைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம்.
அத்துடன்,நமது நாட்டில் நிலவும் நெருக்கடிகள் நீங்கவும், பொருளாதாரம் சிறந்து விளங்கவும், சமூகங்களுக்கிடையி லான சகவாழ்வு மேலோங்கவும் பெருநாள் தினத்தில் பிரார்த்திப்போம். ஆமீன
ஈத் முபாரக் !