சாய்ந்தமருது மாளிகைக்காடு பிராந்தியத்துக்குள் கடந்த காலங்களில் பள்ளிவாசல் நிர்வாகங்கள் செயற்பட்டதை அடிப்படையாக வைத்து காலத்துக்கு ஏற்றவாறு மாற்றங்களைச் செய்து தங்களது புதிய அணி பணியாற்றும் என சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் டாக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பர் தெரிவித்தார்.
சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேச தனவந்தர்களால் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பைத்துஸ் ஸக்காத் நிதியத்துக்கு வழங்கப்பட்ட சுமார் 73 லட்சம் ரூபா பொறுமதியான உபகரணங்கள் மற்றும்103 பயனாளிகளுக்கு நிதி பகிர்ந்தளிக்கும் நிகழ்வு பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ரௌபி (ஹிழிரி) தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே சனூஸ் காரியப்பர் மேற்படி கருத்துக்களை முன்வைத்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்திகளுக்கு பொறுப்பாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் முயற்சியின் பயனாக பல்வேறு துறைகளையும் சார்ந்த 42 பேர் இடைக்கால சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
குறித்த உறுப்பினர்களிடையே சுமூக அடிப்படையில் புதிய நிர்வாகம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகின்றோம்.
எங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட புனித பணியை பிராந்திய மக்களின் பங்களிப்புடன் முன்கொண்டு செல்லஆயத்தமாகி வருகிறோம்.
பல்வேறு சந்திப்புக்களை ஏற்படுத்தி தேவைகளையும் பிரச்சினைகளையும் அடையாளம் கண்டு வருகிறோம். அத்துடன் இனம்காணப்பட்ட பிரச்சினைகளை கையாள்வதற்கு பல குழுக்களையும் ஏற்படுத்தியுள்ளோம்.
அவைகள் ஊடாக முடிந்தளவு மக்களின் பங்களிப்புடன் முன்கொண்டு செல்வோம் என்றும் தலைவர் டாக்டர் சனூஸ் காரியப்பர் தெரிவித்தார்.
பைத்துஸ் ஸக்காத் நிதியத்துக்கு மேலும் நிதிகளை சேகரிக்கும் பொருட்டு சாய்ந்தமருது, மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் தலைவரும் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் உப தலைவரும் முபாறக் டெக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எம்.எஸ். முபாறக் மற்றும் நஸீர் மார்கட்டின்க் நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.எச். நஸீர் ஆகியோர் ஒருதொகை நிதியை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் ஏ.எம் சலீம் (சர்கி), சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரியபள்ளிவாசலின் செயலாளரும் பொறியியலாளருமான எம்.எம்.எம். முனாஸ், தனவந்தரும் பள்ளிவாசலின் பொருளாளருமான முஸ்தபா, மற்றும் பள்ளிவாசலின் நிர்வாக சபை உறுப்பினர்கள், பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் செயலாளர் யூ.எல்.எம். ஹனிபா, பொருளாளர் யூ.எல்.எம். ஹனிபா, பணிப்பாளர் எம்.ஐ.எம். அஷ்ரப் உள்ளிட்டவர்களுடன் உதவிகளைப் பெற்ற பயனாளிகளும் பங்கு கொண்டிருந்தனர்.